பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு நிறைவு.. 2 மணி நேரம் முக்கிய பேச்சு
சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்து ஓட்டல்களுக்கு இருவரும் புறப்பட்டு சென்றனர்.
மகாபலிபுரத்தில் இன்று பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க அர்ஜுணன் தபசு, ஐந்து ரதம், வெண்னை உருண்டை, உள்பட பல்வேறு சிற்பங்களை சுற்றிப்பார்த்தனர்.
அப்போது இருவரும் ஒரு இடத்தில் மரத்தின் அடியில் அமர்ந்து இளநீர் அருந்திபடி 20 நிமிடங்கள் பேசினார்கள். மோடி ஆங்கிலத்தில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கி கூறினார்.
பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு கோவிலின் அழகை கண்டு இருவரும் ரசித்தனர். பின்னர் மாலை மயங்கிய வேளையில் காலசேந்திரா அமைப்பு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரதநாட்டியம், கதகளி, ராமாயணம் உள்பட ஆறு நடன நிகழ்ச்சிகளை .மோடியும் ஜின் பிங்கும் வெகுவாக பார்த்து ரசித்தனர்.
இதையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பாரம்பரிய தமிழ் உணவுகளுடன் கூடிய இரவு விருந்தினை பிரதமர் மோடி அளித்தார். அதன்பின்னர் சுமார் 2 மணி நேரம் பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் ஓட்டல்களுக்கு புறப்பட்டு சென்றனர். மோடி கோவளம் தாஜ் ஓட்டலுக்கும், ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கும் புறப்பட்டு சென்றனர். இந்த ஆலோசனையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் இல்லை.