கனிமொழி பெயரை புறக்கணித்த மோடி.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? பாஜக கரு நாகராஜன் கொடுத்த விளக்கம்
சென்னை: தூத்துக்குடி குலசையில் ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் எவ வேலு ஆகியோரின் பெயரை சொல்லாதது விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில், இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசத்தொடங்கிய பிரதமர் மோடி, கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் எவ வேலு பெயரை குறிப்பிடவில்லை.

பிரதமர் மோடி, இருவரது பெயரையும் உச்சரிக்காமல் விட்டது பேசுபொருளானது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், "மேடையில் கூட தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் எவ வேலு பெயரையும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எனது பெயரையும் சொல்ல பிரதமருக்கு மனமில்லை. இந்த திட்டத்தில் எங்களுக்கும் உரிமை உள்ளது. கருணாநிதியின் கனவு திட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம். எங்கள் பெயரை குறிப்பிடாதது அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்" என்று காட்டமாக பேசினார்.
இந்த நிலையில், பிரதமர் உரையில் திமுக எம்பி கனிமொழி பெயர் விடுபட்டிருப்பது இயல்பாகவே நடந்திருக்கலாம் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரு நாகராஜன் கூறியதாவது:- சில நேரங்களில் நாங்களே மேடையில் பேசும் போது சில தலைவர்களின் பெயரை வாசிக்காமல் விட்டுவிடுவது வழக்கம். அது அந்த கூட்டம் முடிந்த பிறகு தான் நமக்கு தெரியும். இதனை அவ்வளவு பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. எதார்த்தமாக நடந்திருக்கலாம்.
எதிர்பாராதவிதமாக நடந்திருக்கலாம் என்று எடுத்துக்கலாம். தமிழக அமைச்சர்கள் யார் என்ன என்று பார்க்க வேண்டும். அவர்கள் மேல் என்ன வழக்கு இருக்கு என்று பார்க்க வேண்டும். அந்த வழக்கின் நிலைமை என்ன என்று பார்க்க வேண்டும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தினமும் ஒரு அமைச்சர்கள் மீதான் பழைய விடுதலைகளை எல்லாம் ரத்து செய்து மீண்டும் வழக்கு தொடர்ந்து விசாரிக்கிறார். என எவ்வளவோ இருக்கிறது. பாரத பிரதமர் என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவரது பெயரை வாசிக்காமல் விட்டிருப்பதை நான் எதார்த்தமாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications