பக்ரீத் கொண்டாட்டம்.. பிரதமர் மோடி, ராகுல், ஆளுநர் ஆர்என் ரவி உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே முஸ்லிம் மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை செய்து பக்ரீத் கொண்டாடி வருகின்றனர்.
ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையில் இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைத்து குர்பானி சமைத்து ஈகையுடன் வழங்கி வருகின்றனர்.

பிரதமர் மோடி-ராகுல்காந்தி வாழ்த்து
இந்நிலையில் தான் பக்ரீ்த பண்டிகைக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்‛‛பக்ரீத் வாழ்த்துகள். மனித வாழ்வின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்கை ஊக்குவிக்கட்டும்'' என வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‛‛பக்ரீத் தினத்தின் புனிதமான தருணம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும், அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்'' என கூறியுள்ளார்.

ஆளுநர்கள் ரவி-தமிழிசை சவுந்தரராஜன்
இதேபோல் பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்என் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும்'' என கூறியுள்ளார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் ‛‛சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம், இரக்கம், நட்பு போன்றவற்றை உயர்த்தி பிடிப்பதே உண்மையான பக்ரீத் கொண்டாட்டங்களின் நோக்கம். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துகள்'' என கூறியுள்ளார்.

ஸ்டாலின்-ஓபிஎஸ்-இபிஎஸ் வாழ்த்து
முதல்வர் முக ஸ்டாலின், ‛‛நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத்தியாகப்பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து பாதுகாப்புடனும் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ‛‛பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே இறைதூதரின் தியாகங்களை எண்ணிப்பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தான்'' எனவும், முன்னாள் முதல்வர் பழனிசாமி, ‛‛இறைதூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனிதநேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம். எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்'' எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்-பாஜக தலைவர்கள் வாழ்த்து
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‛‛உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழி வந்தவர்கள் என்ற நபிகள் நாயகம்கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்'' என கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‛‛பக்ரீத் பண்டிகை திருநாளில் இரக்கம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு ஆகிய நற்பண்புகள் மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கும். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி சகோதரத்துவத்துடன் மதித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், வைகோ
பாமக நிறுவனர் ராமதாஸ், ‛‛அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற பாடத்தைப் புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‛‛தமிழகத்தில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுப்பூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுசேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள்'' என கூறியுள்ளார்.

திருமாவளவன்-விஜயகாந்த்
விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், ‛‛இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு விதைக்கப்படும் வெறுப்பு அரசியலை வீழ்த்திடவும் ஜனநாயகம், சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும் உறுதியேற்போம்'' எனவும் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‛‛இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டும்'' எனவும் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்- கமல்ஹாசன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‛‛பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள். எத்தனை பெரிய இழப்புகள் வந்தாலும் மாற்றுக்குறையாத அன்போடும், உறுதியோடும் தியாகங்களை செய்பவர்களுக்கு முழுமையான இறையருள் கிடைக்கும் என்பதற்கு பக்ரீத் திருநாள் உதாரணமாக உள்ளது'' என கூறியுள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் கமல்ஹாசன், ‛‛தமக்கு கிடைக்கும் நன்மைகளை முப்பாகப் பங்கீடாய் பிறர்க்கும் தந்து ஈகையின் மகிழ்வை உலகிற்கு உணர்த்தும் பக்ரீத் திருநாள் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார்.

காதர் மொகிதீன்-சசிகலா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கேஎம் காதர் மொகிதீன், ‛‛புனித ஹஜ் திருநாள் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடனும், எல்லா மக்களுடன் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கும் இறையருள் நிறையப் பிரார்த்திப்போம். இந்திய முஸ்லிம்கள் எல்லா சமுதாயங்களுடனும் அண்ணன் - தம்பி, உறவைப் பேணி, ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் வாழ்வோம்; வளர்போம்; உயர்வோம்; உயர்த்துவோம்'' என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் சசிகலாவும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ‛‛தியாகத்திருநாளாம் பக்ரீத் பெருநாளை கொண்டாடம் அன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications