3 நாள் பயணமாக வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. அஜெண்டா இதுதான்!
சென்னை: பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். வரும் 23 ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக அமெரிக்காவில் நடக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அதன்பிறகு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையிலும் உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் பயண திட்டம் பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்துகிறார்.
குவாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த குவாட் கூட்டமைப்பில் இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு உதவி செய்வது உள்ளிட்ட அஜெண்டா, இலக்குகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன. குவாட் கூட்டமைப்பின் அடுத்தக் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 23 ஆம் தேதி Summit of the Future என்ற தலைப்பில் பிரதமர் மோடி, ஐநா சபையில் உரையாற்றுகிறார். ஐநா சபையில் மோடி உரையாற்றும் நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மாநாட்டிற்கு இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கிறார்.
அதேபோல 22 ஆம் தேதி இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து அவர்களுடனும் உரையாடுகிறார். ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்ட்கர், உள்பட அதி நவீன தொழில் நுட்பத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications