மார்ச் 27ஆம் தேதி சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி.. காரணம் என்ன?
பிரதமர் மோடி வரும் மார்ச் 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார்.
சென்னை : மார்ச் 27ஆம் தேதி சென்னை வரவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். முன்னதாக ராமேஸ்வரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த திறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த விமான முனையம்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அது பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணிகளின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து, 3.50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 தளங்கள்
இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் 5 தளங்களுடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்படுகின்றன. முதல் தளத்தில் சர்வதேச பயணிகள் வருகையும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த முனையத்தின் முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்கள் மீது சோதனை நடந்து வருகிறது.

பிரதமர் தமிழ்நாடு வருகை
மார்ச் 27-ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, அங்கு காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த 2,500 பேரையும் கௌரவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய விமான முனைய கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

ஒரே மேடையில்
ஒருங்கிணைந்த விமான முனைய திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இணைந்து பங்கேற்ற நிலையில், மீண்டும் ஒரே மேடையில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications