ஐபிஎஸ் வேலையையே உதறியவர்! அண்ணாமலை நினைச்சிருந்தா திமுக, அதிமுகவுக்கு போயிருக்கலாமே! ஏன் போகலை? மோடி
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நினைத்திருந்தால் திமுகவிலோ அல்லது அதிமுகவிலோ சேர்ந்திருக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்துள்ளார். தனது பேட்டியின் போது அவர் தமிழ் பாரம்பரிய முறைபடி வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு வந்துள்ளார்.

அவரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வளர்ந்துள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதில்: பாரதிய ஜனசங்கம் காலத்திலிருந்து நான் நாடு முழுவதும் பணியாற்றியுள்ளேன். அப்போது மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கூட எங்களிடம் வேட்பாளர்கள் கிடையாது.
அந்த சமயத்தில் இருந்து நாங்கள் கட்சி பணியாற்றி வருகிறோம். எங்கள் கட்சிக்கு ஒரு 4 தலைமுறை கடந்துவிட்டது. அந்த வழிமுறையில் அண்ணாமலை வந்திருக்கிறார். அவர் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கிறார். ஒரு நல்ல ஐபிஎஸ் பணியை வேண்டாம் என உதறிவிட்டு கட்சிப்பணிகளுக்காக வந்திருக்கிறார்.
அவருக்கு ஒரு நல்ல சமூக பின்னணியும் இருக்கிறது. நல்ல உழைப்பாளர், நல்ல பேச்சாளர், சிறிய வயது. சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அவர் இன்னேரம் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ போயிருப்பார். ஆனாலும் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்ற பாதையை தேர்வு செய்கிறார் என்றால், நாட்டு நலனை கையில் எடுத்திருக்கிறார் என அர்த்தம்.
அந்த விஷயத்தில் தமிழகம் பின்தங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் அண்ணாமலை பணியாற்றுகிறார் என்றார். மேலும் பிரதமர் மோடியிடம், அதிமுக என்டிஏ கூட்டணியில் இல்லை என்பதில் உங்களுக்கு வருத்தமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்: இதை வேற மாதிரி பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். 1995 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அதன் பிறகு நான் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. பாஜக ஆட்சி மீது குற்றம் என்றெல்லாம் சொன்னார்கள். அப்போது 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா குஜராத் வந்து எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
என் மீது எத்தனையோ விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்ற வருத்தம் அதிமுக கட்சியினருக்குத்தான் இருக்கும். எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதற்கான எந்த காரணமும் இல்லை. ஜெயலலிதாவின் கனவுகளை சிதைக்கிற பாவத்தை செய்பவர்கள்தான் வருத்தப்பட வேண்டும். பாஜகவுக்கு வருத்தம் ஏற்படுவதற்கான எந்த காரணமும் இல்லை என்றார்.
தமிழகம் வந்த போதெல்லாம் அண்ணாமலையை பிரதமர் மோடி புகழ்ந்தபடியே பேசியிருந்தார். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த போதெல்லாம் அதிமுக மூத்த தலைவர்களை அண்ணாமலை விமர்சித்த போது அவர் வேறு விஷயத்திற்காக டெல்லி சென்றாலும் அதிமுகவை சீண்டியதற்காக டெல்லி தலைமையிடம் டோஸ் வாங்கியுள்ளார் என்றே பார்க்கப்பட்டு வந்த நிலையில் திருப்பூர் பொதுக் கூட்டத்தில் அவசர அவசரமாக ஓடி வந்த அண்ணாமலை, பிரதமர் மோடி அருகே உட்கார்ந்தார்.
அப்போது அண்ணாமலையின் கைகளை இறுக பற்றிக் கொண்டு அவரது தோளை 6 முறை தட்டிக் கொடுத்தார். இந்த சம்பவத்தை மேடையில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications