பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்... ரூ.78,000 மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
வரும் காலத்தில் மின்சாரம் தான் இந்தியாவில் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுக்கப்படுகிறது. அதில் சூரிய ஒளி மின்சாரம் தான் கணிசமான இடத்தை பிடிக்க போகிறது. ஏனெனில் மத்திய அரசு சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்க நேரடியாக களம் இறங்கி உள்ளது.

வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த திட்டத்தின்படி வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
தற்போது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசு மானியம் தருவதால் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துகின்றன. இந்த நிலையில் தான் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில், வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத மின் நுகர்வு வீடுகளில் சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம் என்றும் மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினால் ரூ.78,000 மானிய உச்சவரம்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உடனே பதிவு செய்ய வேண்டும். அதில் மாநிலத்தில் தமிழ்நாட்டை தேர்வு செய்ய வேண்டும், மாவட்டத்தை பொறுத்தவரை எந்த மாவட்டமோ அதனை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
வங்கி கணக்கில் பணம்: இந்த பதிவினை பார்த்து அரசு ஒப்புதல் அளித்த உடன், உங்கள் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்தப்படும். இந்த திட்ட பணிகள் முடிந்த உடன் 7 முதல் 15 நாட்களில் மானியம் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் அடித்து பாஜகவினர் விநியோகித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications