அதிமுக அணிக்கு குட் பை.. அமையப் போகிறதா பாமக-திமுக கூட்டணி? ராமதாசின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
சென்னை: அதிமுக பாமக கூட்டணி முறிந்துள்ள நிலையில், திமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்று இரு கட்சி தொண்டர்களிடையே பரபரப்பான வாத விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.
Recommended Video
பாமகவை பொறுத்தளவில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டது புதிது கிடையாது. மேலும், "இனிமேல் கூட்டணி இல்லை" என்று சொல்லிவிட்டு தனித்துப் போட்டியிட்டதும் புதிது கிடையாது.
அனைத்து வகை அரசியலையும் செய்துவிட்டது பாமக. எனவேதான் அதிமுகவுடன் கூட்டணி முடிந்த கையோடு திமுக பக்கம் பாமக சொல்லுமா என்ற பேச்சு ஆரம்பித்துள்ளது.
முதலிடத்தில் இந்தியா.. கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதா.. என்ன காரணம்.. பகீர் ஆய்வு
பாமக கூட்டணி வரலாறு
1988ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பங்கேற்கவில்லை என்றபோதிலும் அந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6 சதவீதம் வாக்குகளை பெற்றது. இதன்பிறகு தேர்தல் களத்தில் பாமக இருந்தபோதிலும் முதல் முறையாக திராவிட கட்சிகளுடன் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது 1998 லோக்சபா தேர்தலின் போது. அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவை சேர்ந்த தலித் எழில்மலை சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆனார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து திடீரென அதிமுகவில் விலகியதால் வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது. இதைதொடர்ந்து உடனே, திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக.
திமுக, அதிமுகவுடன் கூட்டணிகள்
1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாமகவுக்கு புதுச்சேரியோடு சேர்த்து 8 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது . அதில், ஐந்து இடங்களில் வென்றது. மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூட்டணியிலிருந்து மாறிக்கொண்டிருந்த பாமக மீண்டும் 2001ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தது. தமிழகத்தில் 20 இடங்களை பாமக வென்றது. புதுச்சேரியில் 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்ட போதிலும் அனைத்திலும் தோற்றது. மீண்டும் ஒரு முறை அதிமுக-பாமக கூட்டணி உடைந்தது.
தனித்து போட்டியிட்ட பாமக
இதன்பிறகும், ஒவ்வொரு தேர்தல்களிலும் திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட பாமக, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இரு திராவிடக் கட்சிகளையும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இனி அவர்களோடு கூட்டணியே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக பரப்புரை செய்தனர். ஆனால் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெறவில்லை. நான்கு இடங்களில் மட்டும்தான் இரண்டாவது இடமாவது கிடைத்தது.
அன்புமணி ராமதாஸ்
அவ்வப்போது கூட்டணிகளை மாற்றிக் கொள்வது பாமக கடந்த கால வரலாறு. இப்போது மீண்டும் ஒருமுறை அது நடந்துள்ளது. கூட்டணிகளை மாற்றிக் கொள்வதும் அந்த கட்சிக்கு எளிதான செயல் என்பதால் இப்போது திமுக பக்கம் சாயுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி தான் நடைபெறப் போகிறது. மத்தியிலும் அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப் போவதில்லை என்று பாஜகவிடம் இருப்பது சமிக்ஞை வந்துவிட்டது. கடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது அன்புமணி ராமதாசுக்கு பதவி கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் பாஜகவை சேர்ந்த எல்.முருகன் இணை அமைச்சராக்கப்பட்டார். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருவதால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்பதை பாமக தலைமை உறுதியாக தெரிந்து வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக
எனவே தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது அந்த கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதே நேரம், அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து உள்ளதாக கூறிய ராமதாஸ், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி என்று அவர் தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. எனவே பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஒரே கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு கிடையாது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றால் திமுக தலைமையை கவனத்தை ஈர்க்கும். வருங்காலத்தில் .. குறிப்பாக.. அடுத்த லோக்சபா தேர்தலின்போது திமுக-பாமக கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வட தமிழகத்தில் கணிசமான பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தங்கள் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என பாமக நினைக்கிறது.
நிலைப்பாட்டை மாற்றிய பாமக
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், திமுக ஆட்சி அமைந்த பிறகு, அந்த அரசு கொண்டு வரும் திட்டங்களை பாராட்டி வரிசையாக அறிக்கை வெளியிட்டு வந்தனர். பாமக சட்ட மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலினை, அவரது அறைக்கே, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்டாலினுடன் நெருக்கம்
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தன்று தொலைபேசியில் ராமதாஸ் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டதற்கு ராமதாஸ், தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
திமுக-பாமக கூட்டணி அமையுமா?
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளி வந்தது முதலே திமுகவுடன் பாமக நெருக்கம் காட்டுவதால், கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணியை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளுமா.. இவ்வளவு நாட்களாக பாமகவை ஜாதி ய வாதம் பேசுவதாக கடுமையாக சமூக வலைத்தளங்களிலே் விமர்சனம் செய்து வந்த திமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது போன்ற பல கேள்விகள் விடை அளிக்கப்படாமல் நிற்கின்றன. ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் அல்ல நண்பனும் அல்ல என்ற ஒரு சொல் வழக்கம் ரொம்ப பிரபலம். அது பாமகவுக்கு வெகு பிரசித்தம் என்பதால் , எப்போது எந்த முடிவு எடுக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது . திமுகவில் இருக்கும் சில மூத்த தலைவர்கள் பாமகவை கூட்டணி உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என்று பல மாதங்களாகவே, முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் உண்டு என்பதால், அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இப்போது எப்படி இருக்கும்? திமுக தலைமை அதை ஏற்குமா? என்பதையெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.