பாமக + பாஜக கூட்டணி.. ஜீரோவும் ஜீரோவும் ஒன்னு சேர்ந்திருக்கு.. விட்டு விளாசிய அதிமுக ஜெயக்குமார்
சென்னை: பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜீரோவும் ஜீரோவும் ஒன்று சேர்ந்து இருக்கிறது. இதனால் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பை அடைந்துள்ளது. பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது. இதனால் பெரிய கட்சிகளுடன் கூட்டணி இன்றி தனித்து நின்றது அதிமுக.

ஆனால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியே இன்று அதிமுகவின் முதற்கட்டமாக 16 வேட்பாளர்களை அறிவித்த போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற முடிவினையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து இருப்பதால், அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும், அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- பாமகவை பொறுத்தவரையில் அவர்கள் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் எந்த ஒரு தாக்கமும் ஏற்பட போவதில்லை. அவரே பாஜகவை எந்த அளவுக்கு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஒரு பேட்டியின் போது கூட பாஜகவிற்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று கேட்டதற்கு ஜீரோக்கு கீழே தான் போடுவேன் என்று மோசமான விமர்சனத்தை வைத்தவர்கள் தான் பாமகவினர். பாஜகவை ஜீரோ என்று சொன்னார்கள். இப்போ அந்த ஜீரோ இந்த ஜீரோ எல்லாம் ஒன்றாகியிருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். எனவே பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த தாக்கமும் இல்லை.. கண்டிப்பாக அதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.
முதற்கட்டமாக 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளோம். மீதமுள்ள லிஸ்டை விரைவில் வெளியிடுவோம். கூட்டணி கட்சிகளுக்கு இனி தொகுதிகள் ஒதுக்கப்படுவது என்பது கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இப்போது திமுக மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. திமுக மீது தற்போது கடுமையான எதிர்ப்பலைகள் இருந்து வருகிறது. இதேபோல் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை. 60 ஆயிரம் பூத் கமிட்டிகளை கொண்ட ஒரே கட்சி என்றால் அது அதிமுக தான். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications