என் பெயரையே பயன்படுத்தக் கூடாது! விடாப்பிடியாய் ராமதாஸ்.. அமைதியாய் அன்புமணி! பரபரப்பில் பாமக!
சென்னை: பாமகவில் நடக்கும் மோதல்கள் இப்போது முடிவுக்கு வராது போலிருக்கிறது. இன்றைய தினம் நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது பெயரையே பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக பேசியிருக்கிறார் ராமதாஸ். ஏற்கனவே அன்புமணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கும் நிலையில், அன்புமணி தலைவர் இல்லை என கடிதம் அனுப்பி இருக்கிறார் ராமதாஸ். ஒவ்வொரு நாளும் மோதல் அதிகரித்து வரும் நிலையில் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் பாமக தொண்டர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளில் பிளவு ஏற்படுவது சகஜம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிமுக. மதிமுக பிரிந்தது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பிரிந்தனர். பல கட்சிகளில் இருந்தும் பிரிந்தவர்கள் புதிய கட்சி ஆரம்பிப்பது வழக்கம் தான்.
ஆனால் அவர்கள் கொள்கை ரீதியாக ஒன்று ஒன்று சேர்ந்து பின்பு கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது வேறு. தந்தை மகன் இடையே அதிகார யுத்தத்தால் இருவரும் இரு துருவங்களாக நிற்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்த ராமதாஸ் அதன் தலைவராக ஜிகே மணியை பின்னர் நியமித்தார். இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு ஜி கே மணியை கௌரவ தலைவராக நியமனம் செய்துவிட்டு அன்புமணியை தலைவர் ஆக்கினார். அதற்கு பிறகு கூட்டணி முடிவு நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை அன்புமணி தான் கவனித்து வந்தார். இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. பல்வேறு விவகாரங்களில் தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த மோதல் அன்புமணியை செயல் தலைவர் ஆக பதவி இறக்கம் செய்வதில் வந்து முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் அதற்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பிலும் அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் ராமதாஸ். அதே நேரத்தில் ராமதாஸ் குறித்து அன்புமணி எந்தவித கருத்துக்களையும் கூறாமல், மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்த மாதம் 100 நாள் சுற்றுப்பயணத்தையும் தொடங்க இருக்கிறார் இடையில் ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டங்களை 99 சதவீத நிர்வாகிகள் புறக்கணித்ததால் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை நீக்கி வருகிறார். பொது செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா தொடங்கி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டு ஏற்கனவே பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், புதிய நிர்வாகிகள் என நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இப்படியாக பரபரப்பான சூழல் அரங்கேறிக் கொண்டிருக்க திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார் அன்புமணி. கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான், எனக்குத்தான் நிர்வாகிகளை நீக்கும் சேர்க்கும் அதிகாரம் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது தலைவராக நானே தொடர்கிறேன் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் ராமதாஸ். இது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ராமதாஸ்.
உச்சகட்டமாக எனது பெயரை பயன்படுத்தக் கூடாது, இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறி இருப்பது பாமக தொண்டர்களை வளர்த்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தந்தை மகன் உச்சகட்டத்தை எட்டி இருப்பதாக கூறுகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் தொடங்கியிருக்கும் நிலையில் திமுகவும் அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அளவிலான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மாவட்ட அளவில் சுற்றுப்பயணங்களையும் தொடங்கிவிட்டனர்.
இப்படி தமிழகத்தின் பிரதான கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கும் நிலையில் பாமகவில் நடக்கும் அதிகார யுத்தம் தொண்டர்கள் நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. யாருடன் கூட்டணி? யார் தலைமையில் கட்சி இருக்கிறது? என்பது தெரியாமல் குழம்பிப் போயிருக்கின்றனர். கட்சியை ஆரம்பித்த ராமதாஸ் பின்னால் செல்வதா? கட்சியின் எதிர்காலமான அன்புமணி பின்னால் செல்வதா? என குழப்பம் இருக்கிறது. இருதரப்பிலும் நிர்வாகிகள் நிற்கின்றனர். யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி தவிப்பதாக சொல்கின்றனர் நம்மிடம் பேசிய பாமக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications