ஆண்டுக்கு 10 லட்சம் வரை வருமான வரி இல்லை! நீட் தேர்விலிருந்து விலக்கு! பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை: பாமக தேர்தல் அறிக்கையில் ஆண்டு வருமானம் ரூ 10 லட்சம் வரை இருந்தால் வருமான வரி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பாஜக கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப்படும் என்பது குறித்து பாமக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அம்சங்கள் பின்வருமாறு:

மகளிருக்கு மாதம் ரூ.3,000
* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
* மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
* விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை இப்போதுள்ள 33 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தவும், அதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றவும் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
* மத்திய அரசால் வழங்கப்படும் கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால மருத்துவ உதவி தற்போதுள்ள 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு
* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை.
* பொதுச் சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.
* மத்திய அரசின் அனைத்துச் சேவைகளையும் சான்றிதழ்களையும் இணையம் வாயிலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.10 இலட்சம் வரை வரி இல்லை
* தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* ரூ.7 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 5% வரி வசூலிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 87ஆவது பிரிவின்படி ரூ.15,000 வரை வரி தள்ளுபடி அளிக்கப்படும் என்பதால், ரூ.10 இலட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
* ரூ.10 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி வசூலிக்கப்படும்.
* ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும்.
* ரூ.20 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும்.
* ரூ.1 கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு 50% வரி வசூலிக்கப்படும்.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
* இந்தியாவில் தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. இதை 2 அடுக்குகளாகக் குறைக்க பா.ம.க. வலியுறுத்தும்.
* புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 10%, 25% என்ற அளவில் இருக்கும்.
* இன்றைய நிலையில் 5% ஜி.எஸ்.டி. விகிதத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
* மது, புகையிலை உள்ளிட்ட மனித குலத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்பிலிருந்து நீக்கப்படும். இவற்றுக்கு 100% வரை தீமை வரி வசூலிக்கப்படும்.
புதுவைக்கு மாநிலத் தகுதி
* புதுவை யூனியன் பிரதேசத்திற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* புதுவைக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் போது, மத்திய அரசுக்கு அம்மாநிலம் வழங்கவேண்டிய கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய பா.ம.க. வலியுறுத்தும். இவ்வாறு பாமக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications