ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பங்கள் சீரழிகின்றன! தமிழக அரசு வேடிக்கை தான் பார்க்குமா? ராமதாஸ் வேதனை!
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை திருத்தப்பட்ட முறையில் மீண்டும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுவுக்கும், லாட்டரிக்கும் சற்றும் குறையாமல் ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பங்கள் சீரழிந்து வருவதாக அவர் வேதனை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கவலை அளிக்கிறது
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த உணவக ஊழியர் காந்திராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் கவலை அளிக்கின்றன.

ஆன்லைன் ரம்மி
கடந்த ஒரு வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பறிபோன மூன்றாவது உயிர் இதுவாகும். இதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி ஆட ஒரு மாணவர் மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தார்; குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

வேடிக்கை பார்க்குமா?
ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்வது தினசரி நிகழ்வாகி விடும். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை காரணம் காட்டி ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?

குடும்பங்கள் சீரழிவு
மதுவும், லாட்டரி சீட்டும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனவோ, அதை விட மோசமான சீரழிவுகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications