தி.மு.க அரசின் சூப்பர் நடவடிக்கை.. தமிழகத்தில் அடியோடு சரிந்த கொரோனா.... பாராட்டி தள்ளிய ராமதாஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாம் அலை போட்டு பாடாய்படுத்தியது. தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 31,000-ஐ கடந்து சென்றது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
சென்னையின் முக்கிய மருத்துவமனைகள் முன்பு ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றன. ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.

குறையும் கொரோனா
எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு போடப்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக 31 ஆயிரத்துக்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. அதன்பிறகு ஏராளமான தளர்வுகள் கொடுக்கப்பட்டன. பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

மெகா தடுப்பூசி முகாம்கள்
அதே வேளையில் மக்கள் கூடுவதை தவிர்க்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவை தடுக்கும் பேராயுதமான தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா 2,000-க்கும் கீழ் குறைந்து விட்டது.

கோவை, சென்னையில் குறைவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு 18 ஆக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கொரோனா கடுமையாக அச்சுறுத்திய கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. தலைநகர் சென்னையில் 164 என்று பாதிப்பு 200-க்கு கீழ் சென்று விட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 15,842 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமதாஸ் பாராட்டு
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 1300க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்.

மக்களும் காரணம்
தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications