புகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..!
சென்னை: புகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்து கொண்டு வந்துள்ள புரட்சிகர திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப் பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பது தமக்கு வருத்தம் தருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வரவேற்பு
நியுசிலாந்து நாட்டில் 2025-ஆம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன், 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக்கூடாது என்று தடை விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் நலன் காக்கும் நோக்கத்துடன் நியூசிலாந்து நாட்டு அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்க்கது; இது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புகைப்பழக்கம்
உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் முன்னணியில் உள்ள நாடுகளில் நியுசிலாந்தும் ஒன்று. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திலும் அந்த நாடு முன்னணியில் உள்ளது. ஆனாலும் புகைப்பிடிக்கும் வழக்கம் அந்த நாட்டில் கட்டுப்படுத்த முடியாத தீமையாக இருந்து வருகிறது. புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கூட, இன்றைய நிலையிலும் நியூசிலாந்தின் மொத்த மக்கள்தொகையான 49 லட்சம் பேரில் குறைந்தது 5 லட்சம் பேர் தினமும் புகைப் பிடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்குடன் தான் புதிய திட்டங்களை நியூசிலாந்து வகுத்திருக்கிறது.

அதிரடி நடவடிக்கை
முதல் நடவடிக்கையாக 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளது. அதன்படி பார்த்தால், 18 வயதுக்கும் குறைவான எவரும் இனி புகைப்பிடிக்க முடியாது. அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை அடுத்தடுத்து உயர்த்துதல், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிகோட்டின் அளவை குறைத்தல், புகையிலைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்துதல், புகையிலை மற்றும் சிகரெட் விற்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகிய கட்டுப்பாடுகளையும் விதிக்க நியுசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் பயனாக 2025-ஆம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தி விட முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

வெள்ளையர்கள்
வெள்ளையர்களுக்கு மதுவும், புகையும் தவிர்க்க முடியாத தேவைகள் ஆகும். ஆனால், அவர்களே அவற்றின் தீமையை உணர்ந்து புகைப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கை, புகைப்பழக்கத்தால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நமது கண்களை திறப்பதாக அமைய வேண்டும்.

துணிச்சல்
நியுசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஆயிஷா வெர்ரல் ஆகிய இரு பெண்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு புகைக்கு எதிராக போராடுகின்றனர். இந்த முயற்சிக்கு நியுசிலாந்தில் வணிகர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் புகையை ஒழிப்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அதே துணிச்சலுடன் இந்தியாவிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அரசு முன்வர வேண்டும்.

கோரிக்கை
இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப் பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்றுவது மட்டும் போதுமானதல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கு வைத்து அதற்குள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக புகைப் பழக்கத்தை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications