பேரம் படியலையா? திடீரென திமுக அரசுக்கு எதிராக திரும்பிய ராமதாஸ்! அமைச்சர்கள் மீது நேரடி அட்டாக்!
சென்னை: பாமக ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி சேரப் போவதாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். மாதாமாதம் மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிப்பதற்கும், ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதில் அலட்சியம் காட்டுவதாகவும், அரசின் மீதான கோபத்தை வாக்காளர்கள் வாக்களிக்கும்போது வெளிப்படுத்துவார்கள் என கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக தலைமையிலான இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ளார் பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ். அவருக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனவும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள ராமதாஸ் தனது கோபத்தை அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் திமுகவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கு விசிக முட்டுக்கட்டை போட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பாமக ராமதாஸ்
இந்த நிலையில் திடீரென திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனரான ராமதாஸ். அதில்," தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தரமக்கள் அதிக மின் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வலியிறுத்தி, அறிக்கை வெளியிட்டேன்.
மின்கட்டண விவகாரம்
இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள், வணிக பயன்பாட்டிற்கான மின்இணைப்புகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் இணைப்புகளுக்கு பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்மீட்டர் மென்பொருள் மூலம் இயங்கவுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் தாமதம்
இதன் மூலம் மின்சாரத் திருட்டை தடுத்தல், துல்லியமாக மின்சாரத்தை கணக்கிடுதல், மின்சார பயன்பாட்டை ஒரேஇடத்தில் இருந்து கணக்கிடுதல் போன்றவற்றை ஸ்மார்ட்மீட்டர் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளாகப் பட்டியலிடுகின்றனர் என்றார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அவை பொருத்தப்படும். ஸ்மார்ட்மீட்டர் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்றார்.
தங்கம் தென்னரசு
கடந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட்டது என்றார். டிசம்பர் மாதம் அமைச்சர் சிவசங்கர் இதையே முன் மொழிந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 221-வது வாக்குறுதியில் இரண்டு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்வரையில் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
2026 சட்டசபைத் தேர்தல்
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த மேலும் 2 ஆண்டுகாலம் தேவைப்படும் என்றும் அதன் பின் மாதாமாதாம் மின் கணக்கீடு செய்ய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2026 சட்டசபைத் தேர்தல் கோடைகாலமான மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்துவார்கள். இதனால் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் அனைத்துதரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காண்பிப்பார்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications