சின்ன சின்ன ஆசை.. குழந்தையாய் மாற ஆசை.. கவலைகள் மறந்து கொள்ளு பேரன் பேத்திகளுடன் விளையாடிய ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்த தருணத்தை புகைப்படம் வடிவம் வெளியிட்டுள்ளார்.
மேலும், தனக்கிருக்கும் ஆசைகள் அனைத்தையும் சின்ன சின்ன ஆசை என்ற தலைப்பில் மனம் திறந்து தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த விவரம் பின்வருமாறு;
சின்ன சின்ன ஆசை... சிறகடிக்க ஆசை!
என்ன இந்த பூமி? என்பதையறிய
எனது கொள்ளுப்பேரன்,
பேத்திகளுடன் சுற்றி வர ஆசை
வீட்டுக்குள் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில்
அவர்களை முந்தும் வேகத்தில் ஓடி,
அவர்களிடமே கைத்தட்டல் வாங்க ஆசை!
எனக்கிருக்கும் கொள்ளுப்பேரன், பேத்திகள்
நால்வருடன் சேர்ந்து ஐந்தாவதாக நானும்
ஒரு குழந்தையாக மாறி குதூகலிக்க ஆசை!
கொள்ளுப்பேரன், பேத்திகளுடன் சேர்ந்து
கற்பனை விமானத்தில் விண்ணுக்குப்
பறந்து நிலவைத் தொட்டுவிட ஆசை!
அங்கு பல நூற்றாண்டுகளாக வடை
சுட்டு விற்கும் பாட்டியிடம் உங்களின்
வாடிக்கையாளர் யார்? என்று கேட்க ஆசை!
கரு மேகங்களாக மாறி பூமி மீது மாதம் மும்மாரி
மழையாய் பொழிந்து மக்களை நனைக்க,
உழவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆசை!
மருத்துவம் படிக்க விரும்பும்
மாணவர்களைக் கொல்லும்
நீட் தேர்வைக் கொல்ல ஆசை!

சிறுதானியங்களான கம்பு, ராகி, சோளம்,
தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவை
அமோகமாக விளைவதை பார்க்கத் தான் ஆசை!
அவ்வாறு விளைந்த சிறு தானியங்களை
கிழமைக்கு ஒன்றாக மக்கள் தின்று நோயின்றி
வாழ்வதைக் கண்டு மகிழத் தான் ஆசை!
சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மறைந்து
எங்கும் மிதிவண்டிகளில் மக்கள் உற்சாகமாக
பயணிப்பதைக் கண்டு சபாஷ்' சொல்ல ஆசை!
மகிழ்ச்சியுடன் மனைவி ஈன்றெடுத்த குழந்தை
பெண்ணாக பிறந்து விட்டதே; பிள்ளையாக பிறக்க வில்லையே
என்று புலம்பும் ஜென்மங்களின் தலையில் ஓங்கிக் கொட்ட ஆசை!
இவ்வாறு ஒரு குழந்தையாகவே மாறி தனது உள்ளத்தில் இருக்கும் ஆசைகளை நயம்பட எடுத்துரைத்துள்ளார் ராமதாஸ். மரம் வளர்ப்ப்பதற்கும், குடும்ப உறவுகளுடன் நேரம் செலவிடுவதற்கும் ராமதாஸ் எப்போதுமே நேரம் ஒதுக்க தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications