சாதி பாசம்..அன்புமணி - ராமதாஸ் மோதல்! தூது போகும் திமுக - அதிமுக புள்ளிகள்?! போனையே எடுக்காத ’அய்யா’
சென்னை: பாமகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் சொந்த கட்சியில் மட்டுமல்ல அதிமுக திமுகவில் இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாகவும், ஐயாவிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எனது போனை ராமதாஸ் எடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் அந்த திமுக அமைச்சர்.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் அது பாமக உட்கட்சி மோதல் தான். இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
உச்சகட்டமாக 10 லட்சம் பேர் திரண்டு இருந்த வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ் பேசியது பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோடி கணக்கில் செலவு செய்து பிரம்மாண்ட மாநாட்டை கூட்டினால் வீட்டுப் பிரச்சனையை கொண்டு வந்து இங்கே பேசுகிறாரே என Sதம்பித்து போயினர் பாமகவினர்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜிகே மணியும், ராமதாஸின் குடும்பத்தில் இருப்பவர்களும் தான் இந்த மோதலுக்கு காரணம் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி விட்டு ராமதாஸ் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். உச்சகட்ட எதிர்ப்பை காட்டும் விதமாக தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்தது ராமதாசை யோசிக்க வைத்திருக்கிறது.
பாமகவினர் மட்டுமல்ல பிற கட்சிகளில் இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த மோதலால் சற்றே அதிருப்தியில் இருக்கின்றனர். குறிப்பாக அதிமுக திமுகவில் இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், இந்நாள் அமைச்சர்களும் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் செய்ய முயன்று வருகின்றாரா. அந்த வகையில் அதிமுக திமுகவைச் சேர்ந்த இரு முக்கிய புள்ளிகள் இது தொடர்பாக தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள்.
விசாரித்த போது ஆச்சரியம் தரும் ஒரு தகவல் கிடைத்தது. அதிமுகவில் உள்ள மாஜி அமைச்சர் ஒருவர், தற்போது திமுக அமைச்சராக இருக்கும் ஒருவரும் நேற்று பேசியிருக்கிறார்கள். அந்த பேச்சில் பாமக சிக்கல் தான் முக்கியமாக இருந்துள்ளது.
அதாவது, "எதிரிகளிடம் மோத வேண்டிய அய்யா (ராமதாஸ்) , சொந்த மகனிடம் (அன்புமணி) மோதுவது நல்லாவா இருக்கு ? எல்லா கட்சியிலும் தங்கள் வாரிசுகளிடம் பொறுப்பைப் பகிர்ந்து கொடுத்து அரசியல் செய்யும் அதிகாரத்தை கொடுத்து விட்டு மேற்பார்வையை மட்டும் பார்க்கின்றனர் கட்சியின் தலைவர்கள். அப்படியிருக்கும் போது அய்யா மட்டும் ஏன் இப்படி மல்லுக்கட்டுகிறார் ? டாக்டர் அய்யாவின் அறிக்கை என்றால் மிகப் பெரிய மரியாதை அரசியலில் இருக்கும். அவரது அறிக்கை அந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனா, மகனோடு இப்படி மோதுவதும், பொதுவெளியில் அது அம்பலமாவதும் அய்யா மீதிருந்த மரியாதையே போய்டுச்சு. நீங்கள் மூத்தவர். அவரிடம் பேசலாமே ? " என்று அதிமுக மாஜி சொல்லியிருக்கிறார்.
அதற்கு திமுக அமைச்சர், " அயா ராமதாஸிடம் நான் பேசுவேன். நான் சொன்னால் அதை ஏற்பார். அந்த வகையில், அவரிடம் பேச முயற்சித்தேன். நாலு முறை தொடர்பு கொண்டும். அவர் எனது ஃபோனை எடுக்கவில்லை. ஒரு வேளை என்னிடம் அவர் பேசினால் தனது உறுதி குலைந்து விடுமோ என யோசித்துக் கூட அவர் ஃபோனை அட்டெண்ட் பண்ணாமல் இருக்கலாம். இருந்தாலும் முயற்சித்துக் கொண்டு தான் இருக்கேன் " என்று சொல்லியிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications