ஓட்டுப் பொறுக்கி அரசியல் செய்யும் பாமக.. பாஜகவின் நாடக அரசியலை காப்பி அடிக்கிறது.. திருமா அட்டாக்!
சென்னை : ராமதாஸ் சொல்வது போல ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் செய்து வருவது பாமக தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவைப் போலவே வெறுப்பைப் பரப்பி ஓட்டுகளைத் திரட்டும் வேலையையே பாமக செய்து வருகிறது எனச் சாடிப் பேசியுள்ளார் திருமாவளவன் எம்.பி.
செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மநுஸ்மிருதி - மோதல் முயற்சியா?
விசிக சார்பில் மநுஸ்மிருதி வழங்கப்படும் போராட்டம் மோதலை உருவாக்கக்கூடும் என்ற குற்றசாட்டுக்கு பதிலளித்த திருமாவளவன், "துண்டறிக்கை போல நாங்கள் மனுஸ்மிருதி நூலின் ஒரு பகுதியைத் தொகுத்து விநியோகிக்க இருக்கிறோம். அது நாங்கள் அறவழியில், அமைதி வழியில் மேற்கொள்கிற ஒரு பிரச்சார நடவடிக்கை. அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு நாங்கள் போகப்போவதில்லை. பொதுமக்கள் கூடும் இடங்களில் பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், உணவு விடுதிகளின் வாசல்களில் நாங்கள் மநுஸ்மிருதி புத்தகங்களை விநியோகிக்க இருக்கிறோம். இது விழிப்புணர்வு பிரசாரம் தான். யாருக்கும் எதிரான வெறுப்பு பிரசாரம் அல்ல." எனத் தெரிவித்தார்.

ராம்குமார் - சாதி முத்திரை
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பற்றிப் பேசிய திருமாவளவன், "இதைத்தான் நான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். என்னை சாதி முத்திரை குத்தி ஓரங்கட்டினார்கள். எனக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பினார்கள். இன்று மாநில மனித உரிமைகள் ஆணையம் நியாயங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் விசாரிக்க வேண்டுமென பரிந்துரைத்திருப்பதை வரவேற்கிறேன். அந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். இப்போது 10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

திலகவதி - ஆகாஷ் வழக்கு
கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷை விடுதலை செய்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "ஆகாஷ் விவகாரத்தில் பாமக நாடக அரசியல் செய்கிறது, அப்பாவி தலித்களை பழிவாங்குவதில் குறியாக இருக்கிறது, சாதி இந்துக்களை தூண்டி ஓட்டு வங்கிக்காக, அவரே சொல்வது போல ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் செய்கிறது பாமக என்று தொடர்ந்து கூறி வந்தோம்.

ஓட்டுப்பொறுக்கி அரசியல்
பாமக ஓட்டு வங்கி அரசியல் செய்வதை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. எந்தளவுக்கு சாதி சண்டையைத் தூண்டுவதற்கு அப்பாவி தலித்களையும், அப்பாவி வன்னியர்களையும் மோத விடுவதற்கு பாமக, பாஜகவைப் போலவே செயல்படுகிறது, பாமக ஆர்.எஸ்.எஸ் போலவே செயல்படுகிறது என்பதை இந்த நீதிமன்ற தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது, உறுதிப்படுத்தி இருக்கிறது.

நாடக அரசியல்
அவன் அந்த சாதி, நம் வீட்டு பெண்ணை கிண்டல் செய்துவிட்டான் என தலித்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி சாதி இந்துக்களை ஒன்று திரட்டுவது பாமகவின் நாடக அரசியல். பாஜகவின் நாடக அரசியல், முஸ்லீம் வெறுப்பு. பாஜக செய்யும் முஸ்லீம் வெறுப்பைப் போல பாமக தலித் வெறுப்பை பரப்புகிறது. பாஜக சொல்லும் லவ் ஜிகாத் போல பாமக நாடக காதல் என கையில் எடுக்கிறது. சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ மக்களைத் தூண்டிவிட்டு அவர்களை வாக்கு வங்கியாகத் திரட்டுவதுதான் பாஜகவின் சோசியல் என்ஜினியரிங். அதைத்தான் பாமக காப்பி அடிக்கிறது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications