“என் மீதான தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம்.. அவரை கைது செய்ய வேண்டும்".. பாமக MLA அருள் பேட்டி!
சென்னை: "என் மீதான தாக்குதலுக்கு அன்புமணி தான் காரணம். என்னை கொல்ல வேண்டும் என்பதுதான் அன்புமணியின் ஆசை. அவரை கைது செய்ய வேண்டும்." என புகைப்பட ஆதாரங்களை காட்டி பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி அளித்துள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள். இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவருக்கும் அன்புமணி ஆதரவாளர்களுக்கும் சேலத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அடிக்கடி பாமக எம்எல்ஏ அருள் தொலைபேசி எண்ணுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுவதும், ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து, ஏற்கனவே பாமக எம்எல்ஏ அருள், காவல் நிலையத்தில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், வாழப்பாடியில் உள்ள கட்சியின் நிர்வாகி இல்லத்தில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, பாமக எம்எல்ஏ அருள் கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அருள் சென்ற கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அருள் உடன் சென்ற ஆதரவாளர்களும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். பிறகு உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் பாமக எம்.எல்.ஏ அருளின் கார் சேதமடைந்தது. காருக்குள்ளே அமர்ந்திருந்த அருளை கட்சி நிர்வாகிகள் பாதுகாத்தனர். பின், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஒட்டம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்தார்.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலானது. அன்புமணி ரவுடி கும்பலை தூண்டி விட்டு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அன்புமணி வாழ்க என கூறிக்கொண்டு அந்த கும்பல் தாக்கியதாகவும் பாமக எம்.எல்.ஏ அருள் குற்றம்சாட்டிருந்தார். இந்த விவகாரத்தில் அன்புமணியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் சேலம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதனடிப்படையில் அன்புமணி ஆதரவாளர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மோதல் சம்பவம் தொடர்பாக பாமக எம்.எல்.ஏ அருள் உள்பட 40 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாமக எம்.எல்.ஏ அருள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தன் மீதான கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்றவர்களின் புகைப்படங்களை வெளியிட்டார் அருள். கத்தியுடன் தன்னை தாக்க வந்தவர், கல்லை எடுத்து காரில் அடிக்க வந்தவர், இரும்பு ராடை எடுத்து பாமக ஒன்றிய செயலாளரை தாக்கியவர் குறித்த புகைப்படங்களை செய்தியாளர் சந்திப்பில் காட்டினார்.
இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு காரணம் அன்புமணி தான். அவர் தான் இவர்களுக்கு தூண்டுதல். அவர்தான் முதல் குற்றவாளி. இந்த நபர்களின் செல்போன்களை பார்த்தால், அவர்களுடன் அன்புமணியும், அவரது உதவியாளர்களும் பேசி தூண்டி விட்டுள்ளனர். என்னை கொல்ல வேண்டும் என்பதுதான் அன்புமணியின் ஆசை." எனக் கூறியுள்ளார் அருள்.












Click it and Unblock the Notifications