ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல்.. சேலம் மா.செ மீது தாக்குதல்.. போலீசில் பரபர புகார்!
சென்னை: பாமகவை சேர்ந்த ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் வருவதாக பாமக எம்.எல்.ஏ அருள் போலீசில் புகார் அளித்துள்ளார். பாமக மாவட்ட செயலாளர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவரை சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மேலும் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் தான் பாமக உட்கட்சி மோதலால் பாமகவில் குழப்பம் நிலவி வருகிறது. ராமதாஸ் - அன்புமணி சண்டை உச்சகட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், தற்போது கட்சியில் அதிகார மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாமகவும், மாம்பழ சின்னமும் தங்களுக்குத்தான் என்று அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்தார். அன்புமணி தலைமையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அன்புமணியை ஏற்பவர் மட்டுமே மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியும். அன்புமணியை தலைவராக ஏற்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாநில இணை செயலாளருமான ராமதாஸ் அணியைச் சேர்ந்த அருள் இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில் பாமக சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், ஆத்தூர் சென்று விட்டு வாழப்பாடிக்கு திரும்பி வந்தார். அப்போது டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிலர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோல எங்களுடைய ஆதரவாளர்கள் பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இது தவிர வாட்ஸ் அப், பேஸ்ஃபுக் மூலமும் கொலை மிரட்டல் வருகிறது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக எம்.எல்.ஏ அருள், "ராமதாஸ் பின்னால் உள்ள பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இது குறித்து புகார் செய்திருக்கிறோம். இதனை விசாரித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். எங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது. மிரட்டல் வந்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போது பயந்து கொண்டு நாங்கள் கொடுக்க வரவில்லை, மூத்த தலைவர் ராமதாஸ் இருக்கிறார். அவர் பின்னால் நாங்கள் இருக்கிறோம். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். நியாயமான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லை எனில் எதிர் விளைவு ஏற்படும். கட்சியில் நிலவும் பிரச்சனை குறித்து டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை பார்த்துள்ளோம். அவரிடம் வழக்கறிஞர்கள் தெளிவாக விளக்கி உள்ளனர் .
பீகாரில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக கூறுகிறார்கள். நாங்கள் போட்டியிடவில்லை. தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது என்று தெரிவித்துள்ளோம். விரைவில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும். மே 28 ஆம் தேதியுடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி பதவி முடிவடைந்து விட்டது. இப்போது மருத்துவர் ராமதாஸ் தான் தலைவர். ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கையெழுத்து போடுவது எல்லாம் ராமதாஸ் தான். முகவரி மாற்றம் செய்து தர மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications