நீட் என்பது மாணவர்கொல்லி... நாடு முழுவதும் நீட்டுக்கு எதிராக அலை வீசும் -அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
சென்னை: நீட் தேர்வு என்பது மாணவர்கொல்லி என விமர்சித்துள்ளார் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ்.
நாடு முழுவதும் விரைவில் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசத் தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இனியும் ஒரு உயிர்ப்பலி இங்கு நிகழக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இதனிடையே அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவின் விவரம் பின் வருமாறு;

சமூக அநீதி
நீட் சமூகநீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மராட்டியத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி.

மாணவர் கொல்லி
இந்தியாவில் நீட் தேர்வை திணித்த காங்கிரஸ் கட்சியினரே அதன் தீமைகளை உணரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க நல்ல திருப்பம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசத் தொடங்கப் போகிறது என்பதையே மராட்டியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காட்டுகிறது.நீட் மிகப்பெரிய சமூக அநீதி, அது ஒரு மாணவர்கொல்லி என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விலக்கு தருக
இந்த உண்மையை மத்திய அரசு உணர வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும். பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.
நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது என பாஜகவினர் கூறி வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த பெண் எம்.பியான ஜோதிமணி இந்த தேர்வை கடுமையாக எதிர்த்து வருவது கவனிக்கத்தக்கது. நீட் தேர்வு வந்ததால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக தமிழ் வழிக்கல்வி கற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் சதவீதம் பன்மடங்கு சரிந்துள்ளதை அவரது ட்விட்டர் பக்கதிலேயே சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications