'சென்னை மழையால் லட்சக்கணக்கானோர் அவதி.. ரூ 5000 நிதியுதவி வழங்க வேண்டும்..' அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் உட்புறச் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனச் சாடியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, நவம்பர் தொடக்கத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்காதல், ஓட்டம், போலீசில் புகார்.. ரிப்பீட்டு..! மாநாடு படம் போல் குமரியில் மாயமான பெண்
சென்னை மழை
இதையடுத்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்தது. இந்தக்குழு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தனர். ஆய்வு முடித்துக்கொண்டு டெல்லி திரும்பியுள்ள இந்தக் குழு இன்னும் சில நாட்களில் தனது பரிந்துரையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்யவுள்ளது.
ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து பெய்து வருகிறது. இந்த நவம்பர் மாதம் மட்டும் தலைநகர் சென்னையில் 1000 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். கடந்த சில நாட்களாகத் தலைநகர் சென்னையில் விட்டிருந்த மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
மீண்டும் கனமழை
இதனால் நகரின் சில பகுதிகளில் மீண்டும் மழை நீர் தேங்கத் தொடங்கியுள்ளது. சில முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மழை நீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் உட்புறச் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனச் சாடியுள்ள அன்புமணி ராமதாஸ் எம்பி, வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தேங்கியுள்ள மழைநீர்
இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் நான்காவது நாளாக வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்! நான்கு நாட்களாகியும் சென்னையின் முதன்மைச் சாலைகளில் மட்டும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மாநகரின் உட்புறச் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை!
ரூ 5000 வழங்க வேண்டும்
சென்னை மாநகரம் ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக மிதக்கிறது. சென்னையில் இம்மாதம் பெய்துள்ள மழை கடந்த 200 ஆண்டுகளில் இல்லாதது என்பது உண்மை தான். ஆனால், அந்த துயரத்திலிருந்து மக்கள் இன்னும் மீட்கப்படாததை நியாயப்படுத்த முடியாது! சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைவாக வெளியேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு இனியும் தாமதிக்காமல் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.