தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த அமுதாவுக்குத் தன் கணவர் மீது நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்தது. குறிப்பாக, தனது சொந்த அக்காவுக்கும் தனது கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக அமுதா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்தபிரச்சனையில் சொந்த அக்காவையும், கணவரையும் நள்ளிரவில் அமுதா என்ன செய்தார் தெரியுமா? மொத்த ஊரையும் ஆடிப்போக வைத்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் வியாபாரம் செய்து வந்த இவருக்கு, அமுதா (50) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், மகன் சிவராஜ் திருப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அக்காவுக்குக் கொடுத்த அடைக்கலம்
எல்லாம் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான், அமுதாவின் மூத்த அக்காவான கண்ணம்மாவின் (67) கணவர் மற்றும் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து போயினர். ஆதரவின்றி தவித்த தனது அக்கா கண்ணம்மாவை, சிதம்பரம் ஆசை ஆசையாகத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தார்.
கள்ளத்தொடர்பு விவகாரம்
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வீட்டின் சூழல் மாறத் தொடங்கியது. அக்கா கண்ணம்மாவிற்கும், தங்கை கணவர் சிதம்பரத்திற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரே வீட்டிற்குள் இந்த ஜோடி ஒருபுறமும், அமுதா மறுபுறமும் வசித்து வந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், இருவரும் சேர்ந்து அமுதாவிற்கு அடிக்கடி மன உளைச்சலையும், தொல்லைகளையும் கொடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் "என் வீட்டிற்குள் வந்து என்னையே கொடுமைப்படுத்துகிறீர்களா?" என அமுதா தினமும் கணவரிடமும், அக்காவிடமும் சண்டை போட்டு வந்துள்ளார். வீட்டில் தினமும் போர்க்களமாகவே இருந்துள்ளது.
நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம்
தொடர் அவமானங்களாலும், ஆத்திரத்தாலும் மனமுடைந்த அமுதா, இருவரையும் பழிவாங்க ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், சிதம்பரம் மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் அறையில் ஆழமான தூக்கத்தில் இருந்தனர். அப்போது, யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக அறையின் உள்ளே பெட்ரோலை ஊற்றிய அமுதா, அதற்குத் தீ வைத்தார். நொடிப் பொழுதில் தீ மளமளவென அறை முழுவதும் பரவி எரியத் தொடங்கியது.
அலறல் சத்தம்
உடல் கருகிய நிலையில் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த சிதம்பரமும் கண்ணம்மாவும், வலியால் துடிதுடித்துக் காப்பாற்றுமாறு அலறினர். இவர்களது மரண ஓலத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பேராவூரணி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியோடு தீயை அணைத்து, பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் கைது
வீட்டிற்குத் தீ வைத்தபோது அமுதாவின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துப் பேராவூரணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அமுதாவை ஆஸ்பத்திரியிலேயே முறைப்படி கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் சொந்த அக்காவையும், கணவரையும் பெண்ணொருவர் நள்ளிரவில் தீயிட்டு கொன்ற சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications