சாதிவாரி கணக்கெடுப்பு! அனைத்து சமூக தலைவர்களை ஒருங்கிணைத்த அன்புமணி! சென்னையில் மெகா போராட்டம்!
சென்னை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, பல்வேறு சமூக அரசியல் கட்சியினரை ஒருங்கிணைத்து போரட்டம் நடத்த பாமக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் பாமக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கீடு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மத்திய அரசே நடத்த வேண்டும் என திமுக கூறி வருகிறது. ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தமிழகத்தில் தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தை அறிவித்தது. சென்னை தியாகராய நகரில் இது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பாமக மட்டுமல்லாது பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சி பொதுச் செயலாளர் சமரசம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜன், யாதவ மகாசபை சங்கத்தின் ராமச்சந்திரன், தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் தலைவர் திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னேற்ற கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் ஆகியோர் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி சென்னையில் பல்வேறு அரசியல் கட்சிகளை திரட்டி பாமக சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தில்,"தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது. போராட்டத்தை எந்த நாளில் நடத்துவது என்பது குறித்து பிற அமைப்புகளிடமும் கலந்து பேசி முடிவெடுக்கவும் இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் தீர்மானித்திருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications