காதில் மெதுவா சொன்ன ஜிகே மணி.. சீனியர்னு கூட பார்க்காம.. மேடையிலேயே கடிந்து கொண்ட அன்புமணி ராமதாஸ்!
சென்னை: பாமக சட்டசபை குழு தலைவர் ஜி.கே.மணியை, பிரஸ் மீட்டின்போது அன்புமணி ராமதாஸ் அதிருப்தியுடன் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் நேற்று காலையில், பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாமக கௌரவத் தலைவரும், சட்டமன்றக் குழு தலைவருமான ஜிகே மணி, திலகபாமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும்போதே ஜிகே மணி, சட்டசபைக்குச் செல்ல நேரமாகிவிட்டது என அன்புமணியின் காதில் மெதுவாகக் கூறினார்.

இதையடுத்து, அன்புமணி ராமதாஸ், அவரை அதிருப்தியுடன் பார்த்து, முடித்து விடுகிறேன் என்றார். தொடர்ந்து, "சரி நீங்க கிளம்புறதுனா கிளம்புங்க.. சட்டசபையில் போய் அப்படியே பேசி.. பதிவு செய்து ரெக்கார்டில் வரணும் அது.. நீங்க சொல்லிட்டா அப்படியே கேட்டுப்பாங்க அவங்க.. அதான் அவங்க பேசவே விடுவதில்லையே. துடிச்சிக்கிட்டு இருக்குறாரு.. கிளம்புங்க.. போறதுன்னா போங்க" எனக் கடிந்து கொண்டார்.
பாமகவின் மூத்த தலைவரும், பாமக சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜிகே மணி, சட்டசபைக்கு செல்ல நேரமாகிவிட்டது எனக் கூறியதற்காக, அவரை அவமதிக்கும் வகையில், கிண்டல் செய்யும் நோக்கில், பொது மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற வருகைப் பதிவேட்டில், தமிழ்நாட்டு எம்.பிகளிலேயே, மிக மோசமான வருகைப் பதிவு கொண்டவரான அன்புமணி ராமதாஸ், சட்டசபைக்கு செல்வதாகச் சொல்லும் தனது கட்சி எம்.எல்.ஏவையும் அவமதிக்கும் வகையில் பேசி இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில், அனைத்து சாதியினருக்கும் தனி இடஒதுக்கீடு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு, மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55-லிருந்து 17ஆக குறைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட 150 அம்சங்களுடன் பாமக நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications