பாமகவில் இன்று முடிவு.. தைலாபுரத்தில் ராமதாஸ்.. சென்னையில் அன்புமணி.. இருவருமே தனித்தனியாக மீட்டிங்
சென்னை: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதேபோல் சென்னையில் தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஒரே நாளில் இருவரும் தனித்தனியாக கூட்டம் நடத்துவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த மே மாதம் 16ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ராமதாஸ் பேரனும் மாநில இளைஞர் அணி தலைவருமான முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். மற்ற அனைவரும் புறக்கணித்து விட்டார்கள்.

அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகிய 3 பேர் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 80 சதவீத நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த ராமதாஸ், பல்வேறு கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார். பதிலுக்கு அன்புமணியும் கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார். இருவரும் நீக்குவதும், சேர்ப்பதும் என மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
கடந்த ஜூலை 3ம் தேதி தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, எம்எல்ஏ அருளை நீக்கியது தொடர்பாக செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்குப் பதிலளித்த ராமதாஸ், நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக கொறடாவாக அருள் தொடர்வார் என்றார்.
இப்படி மாறி மாறி நிர்வாகிகள் நீக்கம்,நியமனம் என்று இருவரும் அறிவித்து வருவதால், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் இப்போதும் நீடித்து வருகிறது. நிர்வாகிகள் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம் என பா.ம.க.வில் சர்ச்சை நிலவும் நிலையில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார்.
இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சமீபத்தில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. புதிய நிர்வாக குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் அதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதை கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி மறுத்தார். முழு பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றார்.
இந்த பரபரப்பான சூழலில், தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கிடையில், சென்னையை அடுத்த பனையூரில் கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்த அன்புமணி ராமதாஸ், சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருக்கிறதாம். அதேபோல் தைலாபுரத்தில் இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறதாம். இந்த கூட்டத்தில் பிரச்சனைக்கு முடிவு வருமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications