தேர்தலில் தனித்துப் போட்டியா?.. கூட்டணியா?.. தைலாபுரத்தில் ராமதாஸ் முக்கிய ஆலோசனை
சென்னை: சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாமக பிளவுபட்டு நிற்கும் நிலையில், தேர்தல் நிலைப்பாடு, யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அன்புமணி ராமதாஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறார். (PMK Ramadoss)

ராமதாஸ் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை. மாம்பழம் சின்னத்தை கைப்பற்ற ராமதாஸ் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அன்புமணி மீது அவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரித்தது திமுக தான் என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் செய்ய எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. ராமதாஸ் தங்கள் கூட்டணியில் இணைந்துவிடுவார் என்ற அதிமுக கூட்டணியின் கனவு நிறைவேறுவது போல தெரியவில்லை. மறுபக்கம் ராமதாஸ் திமுக அல்லது தவெக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ராமதாஸ் தவெக கூட்டணியில் இணையவுள்ளதாகவும், செங்கோட்டையன் ராமதாஸ் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதற்கிடையே, தவெக சார்பில் யாருடனும் கூட்டணி இல்லை, தவறான வதந்திகள் பரவி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறிய ராமதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகக் குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில், ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சி பெயர், சின்னம், கொடி விவகாரம், கூட்டணி தொடர்பாக ஆலோனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications