திமுகவுக்கு பதிலடி.. "காங்கிரஸுடன் சேர மாட்டோம்".. ஸ்டாலின் பேச்சை வைரலாக்கும் பாமக!
பாமக-அதிமுக கூட்டணி குறித்து கருத்து சொன்ன ஸ்டாலினுக்கு பாமகவினர் பதிலடி தந்துள்ளனர்.
சென்னை: இதுக்குதான்.. எப்போ பேசினாலும் பார்த்து சூதானமா பேசணும்னு சொல்றது... உச்சக்கட்ட டென்ஷனில் அன்று காங்கிரசை விமர்சித்து ஸ்டாலின் பேசிய பேச்சினை இன்று பாமகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பாமக-அதிமுக கூட்டணி உறுதியாயிற்று.. துண்டு போட்டு பேசி தொகுதி பங்கீடும் முடிந்தது... அடிச்சி பிடிச்சு ஒரு எக்ஸ்ட்ரா எம்பி சீட்டும் வாங்கியாகிவிட்டது.
இந்த நிலையில், இக்கூட்டணி பற்றி கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்திருந்தார்.
பழைய ட்வீட்கள்
எப்போதுமே வார்த்தைகளை அவசரப்பட்டு கொட்டிவிடாமல் கவனமாக கையாளும் ஸ்டாலின் இன்று கடுமையாக உஷ்ணமடைந்து கடிவாளம் இல்லாமல் தடித்த வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டார். இதனால் பாமகவினர் கொதித்து போய்விட்டனர். ஏற்கனவே அதிமுகவை வசைபாடி ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்களை தூசி தட்டி இணையத்தில் திமுகவினர் வைரலாக்கினர்.
வைரலாகிறது
இதில் ஸ்டாலின் பேச்சும் சேர்ந்து கொண்டதால், பாமகவினர் இணையத்தில் ரவுண்டு கட்டி இறங்கிவிட்டனர். கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸை அதாவது இப்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசிய பேச்சை பதிலுக்கு கொண்டு வந்து வைரலாக்கி வருகின்றனர்.
நம்பிக்கை துரோகம்
அப்போது "சரியான தருணத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினோம். இனி காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம்" என்று ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதேபோல இன்னொரு கூட்டத்தில், "நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை" என்று கருணாநிதி பேசியிருக்கிறார்.
விமர்சனங்கள்
இப்படி கடந்த காலங்களில், எந்த சூழ்நிலையில், எந்த மனநிலையில், எப்போதெல்லாம் காங்கிரஸை திமுக விமர்சித்ததோ அது எல்லாவற்றையும் தேடி கண்டுபிடித்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையதளத்தையே சூடு பறக்க தெறிக்க விட்டுள்ளனர் பாமகவினர்.
நிரந்தர எதிரி
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற கோணத்தில் இதை எடுத்து கொள்வதா? அல்லது 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை' என்ற கோணத்தில் எடுத்து கொள்வதா? என தெரியவில்லை. ஆக மொத்தத்தில் தமிழக மக்கள் "தேமே" என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு இந்த தலைவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.