மாம்பழ சின்னத்தை என் தலைமையிலான பாமகவுக்கு ஒதுக்குங்க.. தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!
சென்னை: நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். அன்புமணி உடனான மோதல் காரணமாக பாமக இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், மாம்பழ சின்னத்தை ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் 8 மாதங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரின் மனைவி செளமியா அன்புமணி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த ராமதாஸ், பின்னர் பதவியில் இருந்தும் நீக்கி அறிவித்தார். ஒவ்வொரு வாரமும் அன்புமணியை கடுமையாக சாடி வருகிறார்.

அதேபோல் பாமக தலைவர் பதவியை தாமே எடுத்துக் கொண்ட ராமதாஸ், செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமனம் செய்தார். இருந்தாலும் அன்புமணி எதையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இவர்களின் மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முன்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 12ஆம் தேதி முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையொட்டி தவெக தரப்பில் இன்று காலை பொதுச்சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும். சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் அடையாளம் மாம்பழ சின்னம் என்பதால், அதனை கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அன்புமணி தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு தரப்பும் மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினால், அந்த சின்னம் முடக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications