பாமகவில் அதிகார மோதல்.. ராமதாஸின் வலதுகரமாக இருந்தவர் நீக்கம்.. ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளரான அன்பழகனை அக்கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டுள்ளார். ராமதாஸின் வலது கரமாக இருந்து செயல்பட்டு வந்த அன்பழகன், பாமகவின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். அவர் பணம் பெற்று கொண்டு பொறுப்புகளை வாங்கி கொடுத்ததாக குற்றம்சாட்டி, அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை நானே பாமகவின் தலைவர் என்றும், அன்புமணிக்கு பதவியை கொடுக்க மாட்டேன் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பதிலும் ராமதாஸ் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

ராமதாஸ் குற்றச்சாட்டு
அன்புமணியின் தலைமை பண்பு, மத்திய அமைச்சராக இருந்த போது சந்தித்த சிக்கல், கூட்டணியில் எடுத்த தவறான முடிவுகள் என்று ராமதாஸ் முன் வைத்த குற்றச்சாட்டுகள் அக்கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ராமதாஸ் ஒரு பக்கம் பாமகவில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, அந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
அடுத்த திட்டத்தில் ராமதாஸ்
அதுமட்டுமல்லாமல் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளை இன்று தைலாபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின் போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் அன்புமணி உரிமை மீட்பு பயணத்தை அறிவித்ததோடு, அழைப்பிதழில் ராமதாஸ் படம் போடாமல் வெளியிட்டார்.
அன்புமணி பதிலடி
இதன் மூலமாக அன்புமணி, பாமகவை கையில் எடுக்கும் முடிவில் இருப்பது தெரிய வந்தது. தற்போது ராமதாஸுக்கும் பதிலடி கொடுக்க தொடங்கி இருக்கிறார் அன்புமணி. அதாவது, ராமதாஸின் வலதுகரமாக செயல்பட்டு வந்த பாமகவின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகனை பாமகவில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
அதிகார மோதல்
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக அன்பழகன் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்புகளை அளித்து வந்ததாக அன்புமணி குற்றம்சாட்டி இருந்தார். தற்போது அவரை பாமகவில் இருந்து நீக்கியுள்ள அன்புமணி, அந்த பொறுப்புக்கு செல்வக்குமார் என்பவரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பாமகவில் அதிகார மோதல் அடுத்த கட்டத்தை எட்டி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கவலையில் பாமக
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பாமகவில் தந்தை - மகனுக்கு இடையில் நடந்து வரும் மோதல் அக்கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போது, அதனை ஏற்கும் நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இல்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications