அடித்து ஆடும் சின்னய்யா அன்புமணி.. அப்செட்டில் அய்யா ராமதாஸ்! பாமகவில் அடுத்த என்ன நடக்கும்? பரபர!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில் அதற்கு தடை விதிக்க தமிழ்நாடு காவல்துறை மறுத்துவிட்டது. தொடர்ந்து உற்சாகமாக இருக்கும் அன்புமணி தரப்பு பயணத்தை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அதிருப்தி அடைந்துள்ள ராமதாஸ் தரப்பு அடுத்து என்ன செய்ய வேண்டும் என தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. திமுக, அதிமுகவுக்கு அடுத்து உருவாக்கப்பட்ட இந்த கட்சி வடமாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் மிக வலுவானதாக உள்ளது. வன்னியர் சங்கமாக இருந்த இயக்கத்தை கட்சியாக மாற்றியவர் ராமதாஸ்.
தொடர்ந்து நிறுவனராக இருந்து வந்த அவர் திடீரென நான் தான் தலைவர் என அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியின் தலைவராக இருந்த தனது மகன் அன்புமணிக்கு எதிராகவே ராமதாஸ் திரும்பியது அந்த கட்சி தொண்டர்களை ரசிக்க வைக்கவில்லை.

அன்புமணி
இது ஒரு புறம் இருக்க அடுத்தடுத்து அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். அதே நேரத்தில் நான்தான் தலைவர், எனக்குத்தான் நிர்வாகிகளை நீக்கும் நியமிக்கும் அதிகாரம் இருக்கிறது எனக் கூறி வருகிறார் அன்புமணி. இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி இருக்கிறார் அன்புமணி. திருப்போரூரில் நேற்று திட்டமிட்டபடி பயணம் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றது.
ராமதாஸ்
தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பயணத்தின் போது விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் அன்புமணி. இந்த நிலையில் மகன் நடத்தும் நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் காவல்துறைக்கு புகார் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது அனுமதி இல்லாமல் அன்புமணி பயணம் மேற்கொள்வதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் தனது கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் டிஜிபிக்கு புகார் அனுப்பியிருந்தார்.
அன்புமணி நடைபயணம்
இது தொடர்பாக அன்புமணியின் பயணத்திற்கு தடைவிதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை இல்லை எனவும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர் பாமகவினரிடம் மனு கொடுத்து, உரிய அனுமதி பெற்று நடை பயணத்திற்கு அனுமதி அளிக்கலாம் என மட்டுமே கூறப்பட்டிருப்பதாக அன்புமணி தரப்பு கூறியுள்ளது. இதனால் அன்புமணியின் நடை பயணத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.
அன்புமணி ஆதரவு நிர்வாகிகள்
திட்டமிட்டபடி பயணத்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளதோடு, நேற்றை விட வரும் நாட்களில் அதிக அளவு கூட்டத்தை திரட்ட வேண்டும், வியாபாரிகள், பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், இளைஞர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புமணி தரப்பு உத்தரவிட்டிருக்கிறது. இதனை அடுத்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் அன்புமணி ஆதரவு நிர்வாகிகள்.
ராமதாஸ் அதிருப்தி
இது ஒரு புறம் இருக்க காவல்துறை நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளது ராமதாஸ் தரப்பு. காவல்துறையிடம் புகார் அளித்து எப்படியாவது அன்புமணியின் பயணத்தை நிறுத்தி விட வேண்டும் என சில நிர்வாகிகள் ராமதாஸை வலியுறுத்திய நிலையில் தற்போது அது கை கூடாததால் அதிருப்தியில் உள்ளனராம். மேலும், அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை நடந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications