'வன்னியர் சங்கம்' ஸ்டாலினை கொல்ல சிறையில் இருந்து ஸ்கெட்ச்- பா.ம.க மாநில நிர்வாகி வெங்கட்ராமன் கைது
சென்னை: வன்னியர் சங்கத்தின் துணைத் தலைவர் ம.க. ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாட்டாளி மக்கள் கட்சி ( பா.ம.க.) மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர். வெங்கட்ராமன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னிர் சங்க மாநில துணைத் தலைவரான ம.க.ஸ்டாலின், கும்பகோணம் அருகே திருவிடைமருதூரைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலினை கொல்ல ஒரு ரவுடி கும்பல் முயற்சித்தது.

சிக்கிய ரவுடிகள்
இது தொடர்பாக போலீசில் ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லாலி மணிகண்டன் என்ற ரவுடி தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

பாமக மாநில து.பொ. வெங்கட்ராமன்
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர். வெங்கட்ராமனுக்காக தாங்கள் ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றதாக லாலி மணிகண்டன் கோஷ்டி போலீசில் தெரிவித்தது.

சிறையில் இருந்து ஸ்கெட்ச்
ஒரே கட்சியாக இருந்த போதும் முன்விரோதம் காரணமாகவே ம.க.ஸ்டாலினை காலி செய்ய வெங்கட்ராமன் திட்டம் போட்டிருந்ததும் அம்பலமானது. சென்னை புழல் மத்திய சிறையில்தான் ம.க.ஸ்டாலினை போட்டு தள்ள ஸ்கெட்ச் போடப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வெங்கட்ராமன் கைது
இதனையடுத்து கே.ஆர்.வெங்கட்ராமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இன்று கே.ஆர். வெங்கட்ராமனை ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

வெங்கட்ராமன் சிறையிலடைப்பு
பின்னர் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் வெங்கட்ராமன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி வெங்கட்ராமனை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த கொலைச் சதியில் வேறு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications