அதிமுகவுடன் கூட்டணியால் பாமகவில் பிளவு.. இளைஞர் சங்க செயலாளர் ராஜினாமா
-கோயா
சென்னை: அதிமுக மற்றும் பாஜகவுடன் இணைந்து பாமக கூட்டணி அமைத்திருப்பதால் அக்கட்சியில் பிளவு வெடித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. நேற்று அதிமுக தலைவர்களைச் சந்தித்துப் பேசி கூட்டணியில் இணைந்தது பாமக. அக்கட்சிக்கு 7 லோக்சபா சீட்டுகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளது.
பாமக கடந்த தேர்தலை விட இப்போது பலம் வாய்ந்ததாக மாறியிருப்பதாக கருதப்படுவதால் பாமக, அதிமுக அணியில் இணைந்திருப்பது மற்ற கட்சிகளை அதிர வைத்துள்ளது. இதனால் பாமகஇதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாமகவுக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் கேட்க ஆரம்பித்துள்ளது. மாநில பாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாமக மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த மார்ச் 8, 2017 முதல் பதவி வகித்து வருகிறேன். பாமக அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். எனது விலகல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
ராஜேஸ்வரி பிரியாவைப் போல மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.