ஜெகன் மோகன் பாணியில்... அன்புமணி நடைபயணம்... முழுத்திட்டம் தயார்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதன் ஒரு கட்டமாக வடதமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
பட்டி தொட்டியெங்கும் நடைபயணம் மேற்கொள்வதன் மூலம் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமகவை மிக வலுவாக கட்டமைக்க முடியும் என அவர் நம்புகிறார்.
இதனிடையே தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என மூன்று படைகளை அவர் உருவாக்கி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுறுசுறுப்பு
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் அதே அணியில் தொடர்கிறது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை சத்தமின்றி தொடங்கி சுறுசுறுப்பு காட்டி வருகிறார்.

நடைபயணம்
காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், ஆகிய வட மாவட்டங்களில் பாமக ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள நிலையில், அங்கெல்லாம் நடைபயணம் சென்று மேலும் கட்சியை ஆழமாக வேரூன்ற வைக்க திட்டமிட்டுள்ளார் அன்புமணி.

மழை காரணம்
கடந்த 10-ம் தேதி தொடங்க இருந்த அன்புமணி ராமதாஸின் நடைபயணத் திட்டம் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பரபரப்பு பற்றிக்கொண்டதால் அநேகமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்பு அன்புமணியின் நடைபயணத் திட்டம் செயலுக்கு வரும் எனத் தெரிகிறது.

அன்புமணி உறுதி
அன்புமணியின் செயல்பாடுகளை முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனிக்காமல் இல்லை. இருப்பினும் எதைப்பற்றியும் பொருட்படுத்தாத அன்புமணி ராமதாஸ், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாமக எம்.எல்.ஏ.க்களை பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications