கிராமங்களில் உயர பறக்கப் போகும் பாமக கொடி... அன்புமணி ராமதாஸின் அடுத்த பிளான்..!
சென்னை: வடதமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பறக்கவிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் நகராட்சிகளை கைப்பற்ற வேண்டும் என்பதை அஜெண்டாவாக கொண்டு, அது தொடர்பான பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை தனித்து போட்டியிட்டு கட்சியின் வலிமையை சுயபரிசோதனை நடத்துவது குறித்தும் ஆலோசித்து நடந்து வருகிறது.

வட தமிழகம்
வடதமிழகத்தில் கணிசமான வாக்குவங்கியை வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அடுத்தடுத்த தேர்தல்களை எப்படி சந்திக்கலாம் என்பது குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியிலேயே தொடருவதா அல்லது தனித்து களம் காண்பதா என்பது பற்றியெல்லாம் பேச்சு நடந்து வருகிறது.

5 இடங்கள்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தனித்து போட்டியிட்ட பாமக, இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டியிட்டது. இதில் 5 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. எதிர்பார்த்த வெற்றிகிடைக்காவிட்டாலும், கிடைத்த 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு பாமகவின் குரலை பேரவையில் ஒலிக்கவிடவுள்ளார் ராமதாஸ்.

சோர்வு
இதனிடையே கூட்டணி விவகாரம், கொரோனாவால் ஏற்பட்ட இடைவெளி, வன்னியர் சங்க விவகாரம், குறைந்த எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி, என பல்வேறு காரணங்களால் பாமக தொண்டர்கள் ஓரளவு சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் அவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தி உற்சாகமடைய வைத்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நோக்கி அழைத்துச்செல்ல விரும்பும் அன்புமணி ராமதாஸ், விரைவில் கிராமம் கிராமமாக சென்று கட்சி கொடியை ஏற்றி வைப்பது பற்றி சிந்தித்து வருகிறாராம்.

கண்காணிப்பு
அதேபோல் திமுக அரசின் நடவடிக்கைகளை, செயல்பாடுகளை, அறிவிப்புகளை கூர்ந்து கவனித்து வரும் அன்புமணி ராமதாஸ், இனி வரும் நாட்களில் ஸ்ட்ராங்கான அறிக்கைகள் விடவும் திட்டமிட்டுள்ளார். மீண்டும் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் அரசியல் இன்னிங்க்ஸ் 2.0வை அவர் விரைவில் தொடங்குவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications