ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி...வீடு தேடி வரும் புது ரேசன் கார்டுகள் - அமைச்சர் அதிரடி
நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சென்னை: ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது.
அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

சிறுதானியங்கள்
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். மேலும், நீலகிரி. தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம் மேம்படுத்தப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை உருவாக்கப்படும். புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய மின்னணு குடும்ப அட்டைகள்
தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர். உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டு நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என தெரிவித்தார்.

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரிசு
பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மாநில, மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களை தேர்வு பரிசு வழங்கப்படும்.

ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி
ரேஷன் கடைகளில் இனிமேல் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் 6 அரிசி ஆலைகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications