ஐஸ்வர்யா ரஜினியின் பாரம்பரிய நகைகள்..மயிலாப்பூர் நகை கடைக்கு வந்தது எப்படி? தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து நகைகளை திருடி அவற்றை விற்பனை செய்து நிலம், வீடு வாங்கியுள்ளார் ஈஸ்வரி என்ற பெண். திருட்டு நகைகளை ஈஸ்வரியிடம் இருந்து வாங்கியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.
இதனையடுத்து ஈஸ்வரி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவருக்கு கணவரும், 3 மகள்களும் உள்ளனர். வங்கி வாயிலாக பணபரிமாற்றம் செய்த ஆதாரங்களும் கிடைத்துள்ளது.

ஈஸ்வரி கைது
நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரி சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர். அவரது கணவர் பெயர் அங்கமுத்து. கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி வேலைக்கு சேர்ந்தார். நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாகி விட்டார். நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடத்தை தெரியும் அளவுக்கு, ஈஸ்வரி நம்பிக்கைக்குரியவராக நடந்து கொண்டார்.

நகைகள் திருட்டு
அதன்பின்னர் சிறுக சிறுக நகைகளை திருடி சேர்க்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார் ஈஸ்வரி. அதில் 2 மாடிகளுடன் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். ஈஸ்வரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவே, நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

திருட்டு நகைகள் விற்பனை
100 சவரன் நகைகள், 30 கிராம் வைர நகைகள், வெள்ளிப்பொருட்களை மைலாப்பூரில் உள்ள நகைக்கடையில்தான் அவர் விற்பனை செய்துள்ளார். நகைகளை டிரைவர் வெங்கடேஷன் மூலம் விற்பனை செய்த ஈஸ்வரி அதற்கு கமிஷனாக 9 லட்சம் ரூபாயும் கொடுத்திருக்கிறார்.

நிலம், வீடு
அந்த பணத்தில் நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார் இரண்டே ஆண்டுகளில் கடனை அடைத்து விட்டு பின்னர் வேலையில் இருந்து நின்று விட்டார். இதற்கிடையே வேலைக்கார பெண் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்ததாக கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நடிகர் ரஜினிகாந்த்திடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவிடம் விசாரணை
ஐஸ்வர்யா வீட்டின் லாக்கரில் இருந்த நகைகள் எத்தனை சவரன் காணாமல் போனது என்று அவராலேயே சரியாக கண்டுபிடிக்க முடியவில்லையாம். 60 சவரன் என்று முதலில் கூறப்பட்டது. பல ஆண்டுகாலமாக வேலை செய்த பெண் பல கோடி நகைகளை திருடி வீடு நிலம் வாங்கியுள்ளார். மகளின் திருமணத்தை முடித்து, மளிகைக்கடை வைத்துள்ளார். எனவே நகைகள் குறித்து ஐஸ்வர்யாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

திருட்டு நகை வாங்கியவர் கைது
இதனிடையே ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தனது திருமணத்தின் போது தந்தை சீதனமாக கொடுத்த பாரம்பரிய நகைகளை காணாமல் போன பிறகுதான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனிடையே திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர் நவாலியை தேனாம்பேட்டையில் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 302 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications