சென்னையில் உளவு பிரிவு காவலரை காரில் கடத்தி பணம் பறித்த சம்பவம்.. முக்கிய குற்றவாளி ஒசூரில் கைது
சென்னை: சென்னையில் உளவுப்பிரிவு காவலரை காரில் கடத்தி சென்று மயக்க ஊசி்போட்டு, ஒரு லட்சம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூளைமேடு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் ரவி (45), டிஜிபி அலுவலகத்தில் உளவுப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு பணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு தெரிந்த நபரான அஜய் விக்கி என்பவர், காரில் லிப்ட் தருவதாக கூறி அழைத்துள்ளார். இதை நம்பி ரவியும் காரில் ஏறியுள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும், காரில் மேலும் இரண்டு பேர் ஏறியுள்ளனர்.

மயக்க ஊசி
கார் சென்று கொண்டிருக்கும் போதே இருவரும் வலுக்கட்டாயமாக ரவியை பிடித்து கையில் ஊசி போட்டதாகவும், கார் சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் வழியில் ரவியை தாக்கிய அவர்கள் அரைமயக்க நிலையில் இருந்த அவரிடமிருந்து செல்போனை பிடுங்கி கொண்டு காவலர் ரவியின் அக்கவுண்டில் இருந்து கூகுள் பே மூலம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

18 மணி நேரம்
18 மணி நேரம் காரில் சுற்ற விட்டு, ரவியை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சோழிங்கநல்லூர் அருகே சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்த காவலர் ரவி, நேற்றுமுன்தினம் இரவு நுங்கம்பாக்கம் வந்து காவல் உதவி ஆணையரை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

செல்போன் எண்
இந்தப் புகார் குறித்து உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரணையை தொடங்கினர். காவலரின் செல்போன் எண் நெட்வொர்க்கை வைத்து அந்த போன் எங்கெல்லாம் போயுள்ளது என்பதை ஆய்வு செய்தனர். அவர் கடந்த 28ம் தேதி இரவு முழுவதும் சோழிங்கநல்லூரை அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில் இருந்திருப்பது தெரியவந்தது. எனவே, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

முக்கிய குற்றவாளி
இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான அஜய் விக்கி (எ) விக்னேஷை ஓசூரில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரது செல்போன் டவரை கண்காணித்து வந்த போலீஸார் ஓசூரில் பதுங்கி இருப்பதை அறிந்து ஓசூர் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் ஓசூர் போலீஸார் கைது செய்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications