சென்னையில் 2.5 கிராம் மெத்தபெட்டமைன் போதைபொருள் பறிமுதல்! வசமாக சிக்கிய தமிழக முன்னாள் டிஜிபி மகன்!
சென்னை: சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக போதை பொருள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதற்கேற்ப தமிழகத்தில் அவ்வப்போது கஞ்சா போதையை பயன்படுத்தி கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

அது போல் வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்ப்பது உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் அதிக போதையை கொடுக்கும் மிகவும் அபாயகரமான மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இது அதிக போதையை தருவதால் பெரும்பாலான இளைஞர்கள் இந்த போதை வலையில் சிக்குகிறார்கள். இந்த மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை தயாரிக்க சூடோபெட்ரின் (Pseudoephedrine) எனும் வேதி பொருள் உதவுகிறது.
இந்த போதை பொருளை கடத்தியதாகத்தான் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லியில் வைத்து இவருடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த போதை பொருள் அதிக விலைக்கு விற்பனையாகிறது. மேலும் இதை கடத்தினால் அதிக கமிஷனும் கிடைக்கிறது என்பதால் கடத்தல்காரர்கள் எளிதாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைக்கிறார்கள்.
அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன், அருண் ஆகிய மூவர். இவர்களில் அருண் என்பவர் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் என தெரியவந்தது.
இதையடுத்து இந்த மூவரிடம் இருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு லட்சம் ரொக்கம், செல்போன்கள் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பின்னால் யாரேனும் நெட்வொர்க் உள்ளனரா என்பதை விசாரித்து வருகிறார்கள். தமிழக முன்னாள் டிஜிபியின் மகனே இந்த கடத்தலில் ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications