போலீஸ் வாகனத்திலேயே சம்பவம் செய்த ‘பலே திருடன்’.. அலேக்காக தூக்கிய போலீசார் - சிக்கியது எப்படி?
சென்னை : போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த ட்ராக்கிங் மொபைல் போனை 'அடித்துச் சென்ற' வழிப்பறி திருடன் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது ரோந்து வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போனை திருடிய வழிப்பறி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அந்த நபர் மீது காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருக்கும் விவரம் தெரியவந்துள்ளது. அதனால் போலீசாரை பழிவாங்க இந்த திருட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு சென்ற போலீஸ்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2வது தெருவில் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை ஏற்படுவதாக நேற்று அதிகாலை புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் எஸ்.ஐ நரசிம்மன், ரோந்து வாகன டிரைவர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

ஆட்டையப்போட்ட திருடன்
விசாரணையை முடித்துபிட்டு ரோந்து வாகனத்தில் காவல் நிலையம் வந்தனர். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போன் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் எஸ்.ஐ நரசிம்மன் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் ட்ராக்கிங் மொபைல் போனை திருடிச் சென்றது தெரியவந்தது.

வழிப்பறி ஆசாமி
இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேஷ் தெருவை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ட்ராக்கிங் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆகாஷ் மீது புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

பலே திருடன்
கைது செய்யப்பட்ட ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரை பழிவாங்குவதற்காக போலீஸ் வாகனத்தில் இருந்த மொபைல் போனை திருடியதாக கூறப்படுகிறது. போலீஸ் வாகனத்திலேயே தனது கைவரிசையைக் காட்டிய திருடன் சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications