கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 3 பேர் கைது.. எச்சரித்தபடியே போலீசார் அதிரடி ஆக்ஷன்!
சென்னை: கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை அன்று நாமக்கல், கரூரில் பரப்புரை மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துயரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. கரூர் துயர சம்பவம் தொடர்பாக எந்த வதந்திகளையும் சமூக வலைத்தளத்தில் பரப்ப கூடாது என்றும், உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் கருத்துகளை பதிவு செய்த சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ள 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் துயர சம்பவம் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 நபர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அதன்படி பெரும்பாக்கம் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக உறுப்பினர் சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், வதந்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம். நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை அறிய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
இதற்கிடையே சோஷியல் மீடியாவில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications