திருமாவுக்கு எதிராக திரள தயாரான குஷ்பு, சசிகலா புஷ்பா.. போலீஸ் திடீர் தடை.. சிதம்பரத்தில் பரபரப்பு!
சிதம்பரம் போராட்டத்துக்கு போலீஸ் தடை விதித்துள்ளது
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து, சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. .. குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார்.. இந்த விவகாரம் கடந்த நான்கைந்து நாட்களாக தமிழகம் முழுவதும் வெடித்து வருகிறது.

திருமாவின் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டதாக கூறி, ஆவேசமான கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இதில் பாஜக தலைவர்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.. திருமாவளவனுக்கு எதிராக கொந்தளித்து வருகிறார்கள்.
திருமாவை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா முதல் அர்ஜுன் சம்பத் வரை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.. இதனிடையே, இந்த விவகாரத்தில் திருமாவளாவனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
அதன்படி நாளை திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடக்க உள்ளது... அவ்வாறே திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்திலும் பாஜக சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் குஷ்பு, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பலரும் கலந்து கொள்ளவிருந்தனர்.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் போலீசார் தடை விதித்துள்ளனர்.. இதற்கு காரணம், சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலேயே போலீஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.. திருமாவின் இந்த விவகாரத்தை பெரிதாக்கியதே குஷ்புதான்.. திருமாவளவனின் தொகுதியிலேயே ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததும் பெரும் சலசலப்பு தொற்றி கொண்டது.. தற்போது சிதம்பரம் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்துள்ளதால், மேலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications