3 நாளுக்கு முன்னாடிதான் டிரான்ஸ்பர் ஆனார்.. சென்னையில் ரேஸ் பைக் மோதி பலியான காவலர் குடும்பம் சோகம்!
சென்னை: சென்னை போரூர் பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரேஸ் பைக் மோதி பலியான காவலர் குமரன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் போக்குவரத்து காவல்துறையில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது திடீர் உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
சென்னை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் குமரன் (50) இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போரூர் சுங்கச்சாவடி அருகே அதிவேகமாக வந்த காவஸாகி நிஞ்சா ரேஸ் பைக் ஒன்று காவலர் குமரனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காவலர் குமரன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரேஸ் பைக்கை சாலையில் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேஸ் பைக் மோதி, பணியில் இருந்த போலீஸ்காரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பலியான காவலர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). இவரது மனைவி விஜயலட்சுமி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். குமரன் - விஜயலட்சுமி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள எஸ்.ஆர்.எம் (போரூர்) போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த குமரன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர், எஸ்.ஆர்.எம்.சி (போரூர்) காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குமரன் இன்று இரும்புலியூர் - புழல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடி அருகே மோட்டார் பைக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து, புழல் பகுதியை நோக்கி, அதிவேகமாக வந்த ரேஸ் பைக் குமரன் மீது வேகமாக மோதியது. இதில், குமரனும், ரேஸ் பைக்கை ஓட்டி வந்தவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேஸ் பைக் ஓட்டிய நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், உயிரிழந்த போலீஸ்காரர் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரேஸ் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்புதான் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர் குமரனுக்கு இன்று ரேஸ் பைக் ரூபத்தில் மரணம் நிகழ்ந்துள்ளது அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications