போலீஸ் காவலில் இளைஞர் மரணம்.. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு.. உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: சென்னையில் போலீஸ் காவலில் இருக்கும் போது இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக கூறி விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதில் போலீஸ் காவலிலேயே விக்னேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.

சிபிஐக்கு மாற்றக் கோரி மனு..
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ், காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய விக்னேஷின் உறவினர்கள், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

"முறையான விசாரணை இல்லை"
இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்து வந்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், "காவல் ஆய்வாளர் மோகந்தாஸ் என்பவர் மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்ததால், விசாரணை நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை" என வாதிடப்பட்டது.

சிபிசிஐடி மறுப்பு
அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை முறையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி தரப்பு, 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை முடிவடையும் நிலையில் இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது" என வாதிட்டார்.

தள்ளுபடி..
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ரத்தக்கறை படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பார்க்கும் போது, சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. மேலும், விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications