ராமநவமியில் ராம ரத யாத்திரை நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுப்பு! ஹைகோர்ட்டில் விளக்கம்
சென்னை: இந்து மக்கள் கட்சி தரப்பில் ராமநவமி தினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ராம நவமி தினத்தையொட்டி வரும் ஏப்ரல் 6-ம் தேதி சேலம் அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில்,இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி ராம நவமி தினத்தையொட்டி சேலம் அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராம ரத யாத்திரை நடத்த திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரத யாத்திரை சிறப்பு பூஜைகளுடன் சேலம் அயோத்தியாபட்டினம் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சின்னக்கடை, பெரியக் கடை வீதி வழியாக செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைகிறது.
இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக அரசு, காவல்துறை ஆகியோருக்கு மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபி, சேலம் அம்மாப்பேட்டை உதவி ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி அனுமதி மறுத்து உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, காவல் துறை அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications