அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பு... தமிழகம் முழுவதும் 2,282 பேர் மீது வழக்குப்பதிவு..!
சென்னை: தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக இஷ்டத்துக்கு பட்டாசு வெடித்த 2,282 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட அதிக எண்ணிக்கை ஆகும்.
பட்டாசுகள் வெடிக்க பல மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மீண்டும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி தரப்பட்டிருந்தது.

ஆனால் கொண்டாட்ட மிகுதியில் இருந்த பலரும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கத் தவறிய நிலையில், வெடிகளை டமால் டூமில் என தங்கள் இஷ்டத்திற்கு அலறவிட்டுக் கொண்டிருந்தனர். காற்று மாசுபாடு குறித்த புரிதல் இல்லாததும், மாசுக் கட்டுப்பாடு வாரியம் தரப்பில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியதன் விளைவும் இதற்கு காரணம் ஆகும்.
அரசு உத்தரவை மீறி நேரம் தவறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளி நாளன்று அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 2,282 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 517 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 983 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தாண்டு பதிவு செய்யப்பட்ட 2,282 வழக்குகளில் சென்னையில் மட்டும் 758 வழக்குகள் என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக இதுவரை 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதலாக சென்னையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றன. காற்றில் கலக்கும் நுண் துகள்கள் அடிப்படையில் காற்றின் தரக்குறியீடு கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications