போராட்ட களம் வந்த திருமாவளவன், சித்தார்த்.. பாய்ந்தது வழக்கு.. சென்னை போலீஸ் நடவடிக்கை
Recommended Video
சென்னை: சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தின் மையப்புள்ளியாக சென்னை வள்ளுவர் கோட்டம் மாறியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் நடிகர் சித்தார்த். குடியுரிமைக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்றும் ஆனால், அதேசமயம் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார்.
இதேபோல, திருமாவளவன் பங்கேற்று பேசியபோது, இஸ்லாமியர்களை மட்டுமே, குடியுரிமை சட்டத்திலிருந்து விலக்கி வைத்திருப்பது, அரசியல் சாசனத்திற்கே எதிரானது என்று தெரிவித்தார். டிஎம் கிருஷ்ணாவும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
சென்னையில் சாஸ்திரிபவன் முன்பு திராவிடர் கழக மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், திடீரென சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலலையில்தான், போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது, 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.