காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு
சென்னை: சாலையில் பைக் சாகசம் செய்ய முயன்ற பிரபல யூடியூப் டிடிஃஎப் வாசன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த 24 வயது இளைஞர் Twin Throttlers எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி சிறுவர்கள், இளைஞர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு சினிமா நடிகர்களை போல் ஏராளமான ரசிகர்களும் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.

விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவு செய்வார். இதனால் பல நேரங்களில் அவர் சிக்கலில் சிக்கியும் இருந்தார். இந்த நிலையில் பைக்கில் அதிவேகமாக பயணிப்பது, சட்டத்துக்கு முரணாக சாகசம் செய்வது என பல்வேறு விதிகளை மீறுவதாகவும் அவர் மீது புகார்கள் உள்ளன.
இவர் மஞ்சள் வீரன் எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் பைக்கராகவே நடித்திருந்தார். என்னதான் சாகசம் செய்தால் தனது வீடியோவை பார்ப்போருக்கு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர்கள், பயிற்சி இல்லாமல் வீலிங் செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் அவர் நேற்று சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சாகசம் செய்ய முயன்ற போது நிலைத்தடுமாறி அவரது பைக் தலைக்குப்புற கவிழ்ந்து பள்ளத்தில் சிக்கியது.
இதையடுத்து அவர் காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த விபத்தில் வாசன் காயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் தற்போது காஞ்சிபுரத்திலிருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அவரது வேண்டுகோளின் படி கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டிசத்திரம் போலீலார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே நடந்த விபத்து: இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் ஏற்கெனவே சென்னை அமைந்தகரை அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தின் மீது வாசனின் கார் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவருக்கு காயம் ஏற்பட்டது. வாசனின் காரின் முன் பகுதி சேதமடைந்தது. இவரது கார் விபத்துக்குள்ளானதை அடுத்து வாசன் காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் சென்றதாக தெரிகிறது.
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும் சாலை விதிகளை மீறுவதாகவும் புகாரின் பேரில் போலீஸார் வாசனை பல முறை நடவடிக்கைக்குள்ளாக்கியதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications