நல்லா பொண்ணானு பாக்காதீங்க.. அது பொண்ணு தானானு பாருங்க! சபல ஆண்களுடன் சாட்டிங்..சிக்கிய ஆம்பள அகிலா
சென்னை : சபல ஆண்களை குறிவைத்து டேட்டிங் செயலியில் பெண்கள் போல் பேசி நூதன முறையில் பணம் பறித்து வந்த ஆவடியை சேர்ந்த இளைஞர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒருவர் இருவர் கிடையாது நூற்றுக்கணக்கானோரிடம் இந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவந்துள்ளது.
எப்படியா இப்படி உங்களால மட்டும் முடியுது? என்பது போல் தான் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஏலச்சீட்டு மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, வீட்டு வாடகை மோசடி, ஆன்லைன் மோசடி கொரியர் மோசடி என ஒவ்வொரு நாளும் மோசடிகள் அரங்கேரி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

நம்பி யாரிடமும் பேசக்கூட முடியாத அளவுக்கு இன்று சைபர் கிரைம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அச்சு அசலாக உங்களைப் போலவே குரலில் பேசி பணத்தை ஆட்டையை போடும் கும்பல் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் காவல்துறையினர்.
மோசடி புகாரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சைபர் கிரைம் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டால் இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி என்பது போல தொடர்ந்து பலரிடம் கைவரிசை காட்டி வந்திருக்கின்றனர் சைபர் கிரைம் கொள்ளையர்கள். அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. டேட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் அரட்டை அடிக்கும் செயலிகளில் ஏராளமான இந்தியர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இப்படி பல டேட்டிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. தங்களுக்கு பிடித்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அவர்களுடன் சாட்டிங் செய்து செய்து கொள்ளலாம் . சில டேட்டிங் செயலிகளுக்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது டேட்டிங் செயலியில் சாட்டிங் செய்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டிய சைபர் கும்பலை சென்னை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் தான் தற்போது இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்த நபர். இவர் கடந்த ஜனவரி மாதம் 'சே ஹாய் ஸ்டோம்' என்ற ஆன்லைன் டேட்டிங் செயலியை தரவிறக்கம் செய்திருக்கிறார். அதில் பல பெண்களோடு பேசி வந்த போது அகிலா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து அவருடன் ஆபாச அழைப்பை மேற்கொண்டு இருக்கிறார். அந்த பெண் தனது தனிப்பட்ட புகைப்படங்களையும் சில அரைகுறை ஆடைகள் உடனான புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
அவரிடம் தொடர்ந்து பேசி வந்த தமோதர கண்ணனிடம் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். 500, ஆயிரம் ரூபாய் என அவ்வப்போது பணம் பெற்று வந்த அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பேசாமல் தவிர்த்து இருக்கிறார். இதை அடுத்து தொடர்ந்து மெசேஜ் மற்றும் ஃபோன்கள் வந்துள்ளன. இதை அடுத்து அந்த அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்திருக்கிறார் தாமோதரன் கண்ணன்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள்," நான் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன், நீங்கள் பணம் அனுப்பி அகிலா தற்கொலை செய்து கொண்டார் அவரது செல்போனில் உங்கள் புகைப்படங்களும் இருந்தது.. நீங்கள்தான் அவர் தற்கொலை செய்து கொள்ள காரணம்.. அதனால் உங்கள் மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப் போகிறோம்.. கைது செய்யக்கூடாது என்றால் 70 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி இருக்கின்றனர். பயந்து போன தாமோதரன் தன்னிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாயை அனுப்பி இருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர்கள் தொடர்ந்து அவரிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டு மிரட்டி வந்திருக்கின்றனர்
பயந்து போன தாமோதர கண்ணன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி ஆன்லைன் டேட்டிங் செயலியில் பெண்கள் போல் பேசி பலரிடம் பணத்தைக் கறந்த ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை (25), சீனிவாசன் (26), தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து லேப்டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் தாமோதர கண்ணன் மட்டுமல்லாது ஆன்லைன் செயலியில் ஆபாசமாக பெண்களுடன் பேச விரும்பும் நபர்களை குறி வைத்து பணத்தை மிரட்டி பறித்தது தெரியவந்தது.
நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் சபல ஆண்களை குறி வைத்து இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாக கூறும் போலீசார், டேட்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்யக்கூடாது அப்படி செல்போனில் நம்பத் தகுந்த அப்ளிகேஷன்களை தவிர வேறு அப்ளிகேஷன்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அன்- இன்ஸ்டால் செய்ய வேண்டும்.. மேலும் மிரட்டும் நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications