மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை.. கல்லூரி மாணவரிடம் தீவிர விசாரணை.. என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக +1 மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கல்லூரி மாணவர் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கோவையில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். கரூரிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

தற்கொலை
இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பள்ளி மாணவர்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தத் தமிழக அரசு சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவை எதுவும் பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை.

கல்லரையும் கருவறையும்
இந்தச் சூழலில் சென்னை அடுத்துள்ள மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக நேற்று பிற்பகல் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி எழுதிய கடைசி கடிதமும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி கடிதம்
பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், "எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை. நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. .அந்த கனவு வந்து போவுது. படிக்க முடியவில்லை. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்ல. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் மட்டுமே" என்று எழுதியுள்ளார். மேலும், School is Not Safety என்றும் மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டீச்சரின் மகன்
இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் போலீசார் மற்றொரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், பொண்ணு வயது என்றும் பார்க்காமல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருந்தார். மேலும், அந்த நபர் ஆசிரியரின் மகன் என்பதைக் குறிப்பிட்டு, "டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத" என்றும் எழுத்திருந்தார்.

தனிப்படைகள் அமைப்பு
இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மாணவி 9ஆம் வகுப்பு வரை வேறு ஒரு பள்ளியில் படித்துள்ளார். எனவே பழைய மாணவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல தற்போது படித்து வந்த பள்ளியில் உள்ள அந்த மாணவியின் தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
Recommended Video

கல்லூரி மாணவரிடம் விசாரணை
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 25 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குக் கொண்டு வந்தனர். இந்தச் சூழலில் அவர்களில் கல்லூரி மாணவர் ஒருவரிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மொபைல் எண்ணுக்கு அதிக முறை அழைத்ததன் அடிப்படையில் அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி எண்கள்
தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications